ஆடிப்பெருக்கு 2021: காவிரி அன்னையை வழிபட்டால் திருமண பாக்கியம், புத்திரபாக்கியம் கிடைக்கும்
ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதே போல திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும் இந்த ஆடிப்பெருக்கன்று காவிரியை வழிபடுகி
திருச்சி: ஆடிப்பெருக்கு என்பது நதியைக் கொண்டாடும் விழா. தண்ணீரைக் கொண்டாடும் வைபவம். முக்கியமாக, காவிரி நதியைப் போற்றுகிற ஒப்பற்ற திருவிழா. தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதே போல திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும் காவிரித்தாயை வழிபடலாம்.
காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல்,பவானி உள்ளிட்ட ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் இன்றைக்கும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை அற்புதமாக கொண்டாடுவார்கள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
வரலாற்றுப்படி பார்க்கும்போது கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி தமிழகத்தில் பாயும் காவிரி ஆறு மற்ற மாதங்களில் சாதாரண அளவில் நதியாக ஓடினாலும், ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி ஆறு ஓடும் நதிக்கரைகளில் இருக்கின்ற படித்துறைகளின் உயரத்தை தாண்டி தண்ணீர் பெருக்கு எடுத்து செல்லும் என்றும், அப்படி அளவுக்கதிகமான தண்ணீரால் தங்களின் ஆடி மாதத்தில் 18ஆம் தினத்தன்று தான் மங்கலமான பொருட்கள் அனைத்தையும் வாங்குவதற்கான ஒரு தினமாக தமிழர்கள் கடைப்பிடித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை... காவிரியில் புனித நீராட அரசு அனுமதி கிடைக்குமா
பொங்கி வரும் காவிரி
அகத்திய முனிவர் காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தார். இதனால் பூமி வறண்டது எங்கும் வறட்சி ஏற்பட்டது. விநாயகர் காக்கை உருவத்தில் வந்து கமண்டலத்தை தட்டிவிட பொங்கி பிரவாகம் எடுத்தாள் காவிரி அன்னை. மக்கள் தங்களின் பாவங்களைப் போக்க கங்கையில் நீராடுகின்றனர். இதனால் தோஷம் அடைந்த கங்கை விஷ்ணுவை வணங்க அவரது யோசனைப்படி காவிரியில் நீராடி தனது தோஷத்தை போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம். இதனால் மகிழ்ச்சியடைந்து காவிரி அன்னை பெருமாளைக் காண ஸ்ரீரங்கத்தில் பொங்கி பெருக்கெடுத்து வருகிறார் என்பது ஐதீகம்.
பெருகி வரும் காவிரிக்கு வழிபாடு
ஆடியில் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் இம்முறை எங்கும் நல்லமழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பொங்கி வரும் காவிரியையும், பவானி ஆற்றையும், வைகை ஆற்றையும் வணங்கி வழிபடலாம். காணும் இடமெங்கும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு.
வாழக்கை சிறக்கும்
ஆடிப்பெருக்கன்று காவிரித்தாயை வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. காவிரி அன்னைக்கு பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள்.
சகல ஐஸ்வர்யங்கள் பெருகும்
ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம். அப்படி தங்கம், வெள்ளி என விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாதவர்கள் மஞ்சள், கல் உப்பு வாங்கலாம் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
புதுமண தம்பதியர்
ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை, புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.
குடும்பத்தோடு வழிபாடு
திருச்சியில் அகண்ட காவிரியாக பிரம்மாண்டத்துடன் ஓடிவரும் காவிரித்தாயை வரவேற்கவும் வணங்கவும் ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் மொத்த மக்களும் கூடுவார்கள். அதேபோல, தஞ்சாவூரில் உள்ள திருவையாறு, காவிரியை வரவேற்க விழாக்கோலம் பூண்டிருக்கும். அக்கம்பக்கத்தில் உள்ள எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள், குடும்பம் குடும்பமாக வந்து காவிரி நீரில் மஞ்சள் தூவி, குங்குமம் தூவி, பூக்களை ஆற்றில் விட்டு, வணங்குவார்கள்.
சொந்த பந்தங்களுடன்
ஆடிப்பெருக்கு நாளில் புதுமணத் தம்பதியர் மட்டுமல்லாது குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட ஆடிப்பெருக்கு அன்னையை வழிபடுவார்கள். வீட்டில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் சமைத்து ஆற்றங்கரையோரத்திற்கு சென்று அன்னைக்கு படைத்து வழிபட்டு சொந்த பந்தங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். அங்கேயே, பொங்கல் படையலிட்டு காவிரியை வணங்குவார்கள். 'நீண்ட நெடுங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் காவிரியே, உன்னைப் போல் இந்தத் தம்பதியின் வம்சமும் காலாகாலத்துக்கும் நீடிக்க வேண்டும், வாழையடி வாழையென வளரவேண்டும்' என வேண்டிக் கொள்வார்கள்.
விவசாயிகள் வழிபாடு
விவசாயம் செழிக்கவேண்டும், காடு கரையெல்லாம் நீரால் நிறைந்திருக்கவேண்டும், போட்ட விதையெல்லாம் பொன்னாக முளைக்க வேண்டும் என்று ஆடிப்பெருக்கு நாளில் விவசாயிகள் வேண்டிக்கொள்வார்கள்.
ஸ்ரீரங்கநாதரும் காவிரியும்
ஆடியில் காவிரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவிரியை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசையுடன் வருவார். புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு யானை மீது வந்து காவிரிக்கு கொடுப்பார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இந்த பண்டிகை சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.
பலவகை உணவு
ஆடி மாதம் பதினெட்டாம் தினத்தன்று பெண்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் பலவித சித்தர அன்னங்கள் படைத்து, காவிரி நதி ஓடும் படித்துறைகளில் காவிரி அம்மனை வணங்கி பொங்கலிட்டு, பழங்கள், மஞ்சள், புது தாலி சரடு மற்றும் பல பொருட்களை வைத்து அந்த அம்மனை பூஜை செய்த பின்பு புது தாலி கயிற்றில் மஞ்சள் பூசி வயதில் மூத்த சுமங்கலி பெண்கள் மூலம் அணிவித்து கொள்வர். இந்த பூஜையை புதுமண தம்பதிகள் செய்வதால் அவர்கள் இருவரும் நோய் நொடிகளற்ற நீண்ட ஆயுளும் சிறந்த மக்கட் பேறும் மங்காத செல்வ வளமும் பெற காவிரி தாய் அருளாசி புரிவாள்.
மகாலட்சுமியின் ஆசி
இப்போது உள்ள காலகட்டத்தில் கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல முடியாது. புனித நதிக்கரைகளுக்குச் சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் ஒரு சொம்பில் தூய்மையான தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் போட்டு நிவேதனம் வைத்து, ஏழு புனித நதிகளின் பெயரை கூறி வணங்கினால் போதுமானது. அதோடு இந்த நாளில் மகாலட்சுமி மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாக ஐதீகம். ஆகையால் குபேரனையும் மஹாலட்சுமியையும் இந்த நன்னாளில் வணங்குவதால் குறைவற்ற செல்வம் வீட்டில் நிலைக்கும்.