திருமண தடை நீக்கும் அச்சன்கோவில்,ஆரியங்காவு ஐயப்பன் - புத்திரபாக்கியம் தரும் குளத்துப்புழா பாலகன்
ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சபரிமலைக்கு சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்று இல்லை, அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா ஆகிய கோவில்களுக்கும் சென்றும் ஐயப்பனை தரிசனம் செய்யலாம்.
சென்னை: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 12 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் செல்ல அனுமதி இல்லை என்றாலும் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எரிமேலி,பந்தளம் ஆகிய ஊர்களுக்கு சென்று ஐயப்பனை கண் குளிர தரிசிக்கலாம். அச்சக்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று சாஸ்தாவை தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும், புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் அறுபடை வீடு கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா ஐயப்பனை இந்த கார்த்திகை, மார்கழி மாதத்தில் தரிசனம் செய்தால் திருமணத் தடைகள் நீங்கும் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

பால சாஸ்தா ஐயப்பன்
மனித வாழ்க்கையின் பால பருவத்தைக் குறிக்கும் தலமாக இக்கோயில் விளங்குவதால், பால பருவத்தினர் தங்களது படிப்பு, உடல்ஆரோக்கியம் போன்ற விஷயங்களில சிறந்த பலனைப் பெற இங்கு வந்து வழிபடுவது சிறந்தது என்கிறார்கள். இக்கோயிலில் தை மாதம் முதல் தேதி மகர விளக்கு வைபவமும் மிக விமரிசையாக நடக்கும். செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது குளத்துப்புழா. இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இங்கு சுற்றுலா போல அனைத்து தரப்பு மக்களும் சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம். இங்கு கோயிலுக்கு அருகில் கல்லடையாறு ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பக்தர்கள் மீன்களுக்கு பொரி போடுவது ஒரு வித வழிபாடாகவே இருக்கிறது. திருவனந்தபுரத்திலிருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து எளிதில் சென்று வர முடியும். நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து ஐம்பது கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது இத்தலம். தென்காசியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் இருக்கிறது. திருவனந்த புரத்திலிருந்து சுமார் 45 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இரு மார்க்கத்திலிருந்தும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கேரள அரசு பஸ்கள் உண்டு.

கல்யாண சாஸ்தா
அச்சக்கோவில் ஆலயத்தில் அரசராக காட்சி தருகிறார் சாஸ்தா ஐயப்பன். பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் ஐயப்பன். அச்சன் கோவில் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் கருவறையில், பூர்ணா - புஷ்கலை என்னும் இரண்டு தேவியர்களுடன் அரசரின் தோற்றத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இதனால் இங்கிருக்கும் ஐயப்பனைக் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கின்றனர். செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அச்சன்கோவில் அமைந்துள்ளது.

நோய்கள் நீக்கும் ஐயப்பன்
அச்சன்கோவில் ஐயப்பனை வழிபடுபவருக்குத் திருமணத்தடை இருப்பின் அவை நீங்கும். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சியுடனான வாழ்க்கை அமையும். பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சி கடித்தவர்களுக்கு இங்கிருக்கும் ஐயப்பன் சிலையிலிருந்து சந்தனம் எடுத்துத் தரப்படுகிறது. சந்தனத்துடன், அர்ச்சகர் தரும் புனித நீரையும் சேர்த்துப் பூசினால் விஷம் உடனடியாக நீங்கிக் குணம் பெறலாம். அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயத்தில், ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இங்கிருக்கும் ஐயப்பன் வலது கையில் சந்தனம் மற்றும் புனித நீர் இருக்கிறது. இதனால், ஐயப்பனை பெரும் மருத்துவர் என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்களின் அனைத்து வகையான அச்சங்களையும் நீக்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்னும் நம்பிக்கை இருக்கிறது.

திருமணத்தடை நீங்கும்
பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் ஒரே திருத்தலம் ஆரியங்காவுதான். இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார் ஐயப்பன். இங்கு திருமண கோலத்தில் காட்சி தரும் ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த ஐயப்பனை தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கேரளா மாநிலத்தில் ஆரியங்காவு அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications