Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி..திறக்கும் கதவுகளும்.. சந்தன அபிஷேகம் சிறப்புகளும்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆடி மாத பவுர்ணமி தினமான இன்று அழகர்மலையில் உள்ள காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு இன்று சந்தனம் சாத்துபடி நடைபெறுகிறது. மூடிய கதவுகள் திறக்கப்பட்டு தீபாராதனையும் நடைபெறுவதைக் காண ஏராளமானோர் அழகர்கோவிலுக்கு வந்துள்ளனர்.

Alagarmalai Alagar kovil Patinettamadi Karuppannaswamy Chandanam sathupadi

சித்திரை பௌர்ணமி அன்று வைகையில் அழகர் இறங்கும் சித்திரைப்பெருவிழா. அதற்கடுத்தது ஆடி மாத பவுர்ணமி அன்று நடைபெறும் ஆடித்தேரோட்ட விழா மற்றும் இக்கோயில் ராஜகோபுர கதவில் உறையும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு கதவு திறந்து சந்தனம் சாத்தும் விழா கோலாகலமாக நடைபெறும்.
அழகர்கோவிலில் ராஜகோபுர கதவு அடைபட்டிருப்பது குறித்து மக்களிடம் நீண்ட நெடுங்காலமாக புராண கதை கூறப்பட்டு வருகிறது.

Alagarmalai Alagar kovil Patinettamadi Karuppannaswamy Chandanam sathupadi

கேரளாவை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் பாண்டிய நாட்டுக்கு வந்தான். திவ்விய தேசமான திருமாலிருஞ்சோலைக்கு வந்திருந்த போது அங்கே எழுந்தருளியிருக்கும் கள்ளழகரின் அழகைக் கண்டு மயங்கினான். அழகரை கடத்திக்கொண்டு போய் தனது நாட்டில் வைத்துக்கொள்ள திட்டமிட்ட
அந்த அரசன் நாடு திரும்பிய உடன் மந்திர,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 மந்திரவாதிகளை தேர்வு செய்து பாண்டிய நாட்டுக்கு அனுப்பினான்.

Alagarmalai Alagar kovil Patinettamadi Karuppannaswamy Chandanam sathupadi

அபரஞ்சி என்ற சொக்கத்தங்கத்தால் ஆன அழகரை தூக்கி வரும்படி கட்டளையிட்டான். பதினெட்டு பேரும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள்

மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளை குதிரை மீதேறி பதினெட்டு பேருக்கு முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே மந்திரவாதிகள் அழகர்மலைக்கு வந்தனர். அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம், கருப்பண்ணசாமி அப்படியே அழகரின் அழகில் மயங்கி மெய் மறந்து நின்றது .

18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து, தங்க ஆபரணங்களையும் அழகரையும் தூக்கி செல்லும் எண்ணத்தில் கருவறை நோக்கி சென்றனர். இவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட பக்தர் ஒருவர், ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல, மக்கள் அனைவரும் திரண்டு வந்தனர். மந்திரவாதிகள் 18 பேரையும் கொன்று, பெரிய கோபுரத்தின் முன்பாக பதினெட்டு படிகள் செய்து, படிக்கு ஒருவராக புதைத்தனர்.

Alagarmalai Alagar kovil Patinettamadi Karuppannaswamy Chandanam sathupadi

மந்திரவாதிகளுக்கு காவலாக வந்து மயங்கி நின்ற கருப்பசாமிக்கு காட்சி தந்த கள்ளழகர் அழகர் மலையையும், தன்னையும் காவல் காக்குமாறு உத்தரவிட்டார். இதனையேற்று கருப்பசாமி அழகர் மலையிலேயே தங்கி இன்று வரை காவல் காத்து வருகிறார் என்பது நம்பிக்கை. 18 பேருடன் வந்த அவர் பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தருகிறார்.

ஒருநாள் கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி, அழகருக்கு அர்த்த ஜாம பூஜையின் போது செய்யப்படும் பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்டினாராம் அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு படைக்கப் படுகிறது.

திருடர்கள் உடல் புதைக்கப்பட்ட கோபுரவாசல் தீய ஆவிகளை விரட்டவும், மக்களின் அச்சத்தை நீக்கவும் அழகர்கோவிலில் பதினெட்டாம்படி கருப்பசாமி காவல் தெய்வமாக தென்கலை வைணவத் திருநாமத்துடன் காட்சிதருகிறார்.

சிறுதெய்வமாக நிலைப்படுத்தப்பட்ட கருப்பசாமியை அழகர்கோயில் உயர்சாதி பிராமணர்களும் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே தான் தினமும் அர்த்த சாமப்பூசையில் கள்ளழகருக்கு படைத்த உணவையும், அவருக்கு அணிவித்த மாலையையும் கருப்பசாமிக்கு கொண்டு வந்து படைக்கவும் பிராமண பணியாளர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். நடைமுறையில் கோயிலுக்கும், கருப்பசாமி சன்னதிக்கும் உள்ள ஒரே தொடர்பு இதுதான்.

அழகர் கோவிலில் காவல் தெய்வமாக நின்ற கருப்பசாமி நாளடைவில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருந்து வருகிறார்.

கோயிலில் திருட வந்தவர்களை பிடித்து வெட்டி, கோபுரத்தின் வாசல்படிக்கு கீழே புதைத்ததால் அந்த வாசல் தீட்டுப்பட்டது. எனவே, அவ்வழியே தெய்வம் வருவது முறையில்லை. தெய்வம் வராத வழியில் மக்கள் செல்ல அஞ்சுவர். எனவே, கோயில் தலைவாசல் அடைக்கப்பட்டது. தெய்வமும், மக்களும் சென்று வர வாசலுக்கு சற்று வடக்கே கோவில் கோட்டை மதில் சுவரை உடைத்து வண்டி வாசல் என்ற பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Alagarmalai Alagar kovil Patinettamadi Karuppannaswamy Chandanam sathupadi

இங்குள்ள கருப்பண்ணசாமிக்கு உருவம் கிடையாது. கோபுர வாசல் கதவில் தான் அவர் உறைவதாக நம்பிக்கை. எனவே, இந்தக் கதவுகளுக்கு சந்தனம், குங்குமம், கற்பூரம் உள்ளிட்டவை பூசி, பூ, மாலை ஆகியவற்றால் அலங்கரித்து பூஜை செய்வது வழக்கம். கருப்பண்ணசாமிக்கு தனி திருவிழா ஏதுமில்லை. ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இக்கதவுகளுக்கு சந்தனம் சார்த்தி வழிபடுகின்றனர்.

ஆடி திருவிழாவில் தினமும் காலையும் மாலையும் அழகரின் போர்க் கருவியான சக்கரத்தாழ்வார் தேரோடும் வீதியில் வலம் வந்து எட்டுத்திக்கும் படையல் இடுகிறார். ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டு இருக்கும் பதினெட்டாம் படி கருப்பசாமி கோபுர வாசல் கதவு பிரம்மோற்சவ காலமான ஆடி மாதம் பௌர்ணமி அன்று தேரோட்ட நாளில் திறக்கப்படும் போது அவ்வாசல் வழியாக சக்கரத்தாழ்வார் வந்து செல்கிறார். அழகரின் பல்லக்கு கூட இவ்வழியை பயன்படுத்துவது இல்லை. எனவே, சக்கரத்தாழ்வாருக்காக மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கோபுர வாசல் திறக்கப்படுகிறது.

ராஜகோபுரத்தின் உள்ளே இருக்கும் பதினெட்டு படிகளிலும் பூக்கள், எலுமிச்சம் பழம், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் வரிசையாக அலங்கரிக்கப்பட்டு 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்படும். சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்படும். இதனை தரிசனம் செய்ய ஏரளாமானோர் அழகர் கோவிலில் குவிந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+