சந்திர கிரகணம் 2021: சூரியன் சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் வரம் பெற்ற ராகு கேது - புராண கதை
மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர் கேது என அழைக்கப்பட்டனர். உயிர் ஒன்றாக இருந்தாலும் எதிர் எதிர் திசையில் சஞ்சரிக்கின்றனர்.
சென்னை: நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் எதிர் எதிர் திசையில் பயணம் செய்கின்றனர். தங்களின் இந்த நிலைக்குக் காரணமான சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் தவமிருந்து வரம் பெற்றனர். ஒரு ஆண்டிற்கு நான்கு முறை சூரியன், சந்திரனின் பார்வை பூமியின் மேல் விழாமல் இருக்கும் என்ற வரத்தை பிரம்மா கொடுத்தார். இதுவே சூரிய கிரகணம் சந்திர கிரகணம் எனப்படுகிறது. இதனைத்தான் சூரிய சந்திரனை ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குவதாக கதைகள் சொல்லப்படுகின்றன.
முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம் என்று மூன்று வகையான சந்திர கிரகணங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். கிரகணங்களைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் இது முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும்.
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இதனால் ரத்த நிலா என அழைக்கப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு ஐஜி, கோவை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்...தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
ராகு கேது பழிவாங்கும் பாம்புகள்
சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நிகழ்வதே ஒரு பழிவாங்கும் நிகழ்வு என்றே கூறுகின்றனர். சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் வரம் பெற்றே ராகு கேது கிரகணத்தை ஏற்படுத்துவதாக புராண கதைகள் கூறுகின்றன. பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வாசுகி என்ற பாம்புதான் உதவியது. அமிர்தம் வெளிவந்த பின்னர் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்தார். முதலில் தேவர்களுக்கும் பின்னர் அசுரர்களுக்கு கொடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மோகினியை ஏமாற்றிய சுவர்பானு
அப்போது சுவர்பானு என்று அசுரன் தேவர்களைப் போல வேடமிட்டு வந்து மோகினி வேடத்தில் இருந்த விஷ்ணுவிடம் அமிர்தத்தை வாங்கி மடக்கென்று குடித்து விட்டார். இந்த செயலைக் கண்ட சூரியனும் சந்திரனும் சுவர்பானு பற்றி விஷ்ணுவிடம் சொல்லிக்கொடுத்தனர். விஷ்ணுவிற்கு எல்லாம் தெரிந்தும் ஒரு காரணத்தோடுதான் அமிர்தத்தை குடிக்கக் கொடுத்தார். அதன் பின்னர் மகாவிஷ்ணு தனது கையில் இருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் தட்டவே தலைவேறு முண்டம் வேறாக விழுந்து இரண்டாக வெட்டுப்பட்ட கீழே விழுந்தார்.
காலியான பானை
அமிர்தம் குடித்த சுவர்பானுவிற்கு உயிர்போகவில்லை. சுவர்பானு ஒப்பந்தத்தை மீறி அமிர்தத்தை ஏமாற்றி குடித்ததால் அசுரர்களுக்கு அமிர்தம் கிடையாது என்று கூறினார் மகாவிஷ்ணு. இதனால் ஏமாற்றமடைந்த அசுரர்கள் பானையை பறிக்க முயல எல்லா அமிர்தத்தையும் தேவர்களுக்கே கொடுத்து விட்டு பானையை காலி செய்து விட்டார் மோகினி.
மனித உடலோடு இணைந்த பாம்பு தலை
இதற்கெல்லாம் காரணம் சுவர்பானுதான் என்று அசுரர்கள் கோபம் முழுவதும் சுவர்பானு மீது திரும்பியது. வெட்டுப்பட்டு துடித்துக்கொண்டிருந்த சுவர்பானுவை தங்களின் குலத்தில் இருந்தே விலக்கி வைத்து விட்டனர். தனது நிலையினை கூறி பிரம்மாவிடம் முறையிட்டார் சுவர்பானு. இதற்கு மாற்று ஏற்பாடு மகாவிஷ்ணுவால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறி கை விரித்து விட்டார் பிரம்மா. விஷ்ணுவை சரணடைந்தார் சுவர்பானு. உடனே பாம்பு உடலை மனித தலையோடு இணைத்தார் விஷ்ணு. பாம்பு தலையை மனித உடலோடு இணைத்தார்.
சூரிய, சந்திர கிரகணங்கள்
மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர் கேது என அழைக்கப்பட்டனர். உயிர் ஒன்றாக இருந்தாலும் எதிர் எதிர் திசையில் சஞ்சரிக்கின்றனர். தங்களின் இந்த நிலைக்குக் காரணமான சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் தவமிருந்து வரம் பெற்றனர். ஒரு ஆண்டிற்கு நான்கு முறை சூரியன், சந்திரனின் பார்வை பூமியின் மேல் விழாமல் இருக்கும் என்ற வரத்தை கொடுத்தார். இதுவே சூரிய கிரகணம் சந்திர கிரகணம் எனப்படுகிறது. இதனைத்தான் சூரிய சந்திரனை ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குவதாக கதைகள் சொல்லப்படுகின்றன.
தோஷம் இல்லை கவலை வேண்டாம்
பொதுவாக கிரகண காலங்களில் வழிபாடுகள் செய்யப்படுவதில்லை. ஆலயங்கள் மூடப்பட்டிருக்கும். கிரகணங்கள் முடிந்த பின்பு நன்றாக சுத்தம் செய்து முடித்து அதன்பிறகே ஆலயங்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படும். இந்த சந்திர கிரகணம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் தெரியாது என்பதால் நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆலயங்களில் வழக்கமான வழிபாடுகள் நடைபெறும். நாளைய தினம் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவும் நடைபெறுகிறது.