மதுரை ஆவணி மூலம் திருவிழா : கருங்குருவிக்கு உபதேசம் செய்த சிவனின் திருவிளையாடல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய அம்சமான சிவனின் திருவிளையாடல்கள் தொடங்கியுள்ளன. முதல்நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது.
மதுரை: சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. 64 திருவிளையாடல்களில் 12 முக்கிய திருவிளையாடல் லீலைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும். முதல்நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய அம்சமான சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. முதல் நாளான இன்றைய தினம் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது.

வருந்திய கருங்குருவி
ஒருவன் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்த நிலையில் சிறிதளவு பாவம் செய்திருந்ததால் மறுபிறவியில் கருங்குருவியாக பிறக்கிறான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்திருந்தது.

கருங்குருவி வழிபாடு
அந்த சமயத்தில் அந்த மரத்தின் கீழே சிலர் மதுரையைப்பற்றியும், அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று பேசி கொண்டனர். இதை கேட்ட கருங்குருவி அங்கிருந்து பறந்து மதுரைக்கு வந்தது. அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை தினமும் வணங்கி வந்தது.

இறைவன் உபதேசம்
இறைவனும் அந்த குருவியின் பக்திக்கு மனமிரங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். அப்போது கருங்குருவி இறைவனிடம் எங்கள் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கும்படி கேட்டது. மேலும் கருங்குருவி இறைவன் வழங்கிய மந்திரத்தை உபதேசித்து முத்திபேறு அடைந்தது என்பது வரலாறு.

திருவிளையாடல்கள்
சிவ பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் வரிசையாக நடைபெற உள்ளன. நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தது, உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்ற லீலை நடைபெறும். அன்றைய தினம் இரவு சுந்தரேஸ்வரருக்கு சாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது. அதுமுதல் மதுரையில் சிவனின் ஆட்சி தொடங்குகிறது.

விறகு விற்ற லீலை
தொடர்ந்து நரியை பரியாக்கிய லீலை, பிட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலையும் நடைபெறும். இந்த லீலைகள் முடிந்த பின்னர் மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் சட்டதேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். விழாவின் கடைசி நாளில் பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications