ஆலயதரிசனம் - முறப்பநாடு - கைலாயநாதர் ( குரு தலம்)
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது முறப்பநாடு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ஆகும். நவகைலாயங்களில் முறப்பநாடு நடு கைலாயமாகும். இத்திருத்தலம் குருவின் தலமாகும்.

புராணச் சிறப்பு:
சூரபதுமன் அசுரனின் வழியில் வந்த அசுரன் ஒருவன் முனிவர்களுக்கு செய்த தொல்லையை பொறுக்க முடியாமல் அவர்கள் முறைப்படி நின்று முறையிட்டார்கள். சிவபெருமான் திருவுளம் இரங்கி அவர்களுக்கு அருள் செய்தார். முறைப்படு நாடு முறப்பநாடு எனப் பெயர் பெற்றது என்பது வரலாறாகும்.
வரலாற்றுச் சிறப்பு:
சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையைக் கண்டு கவலைக் கொண்டான். பல திருக்கோயில்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி பின்பு இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடவும் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிக அழகாக தோன்றினாள். இங்குள்ள நந்தி, மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக் கொண்டதால் குதிரை முகத்துடனே காட்சியளிக்கிறது. மன்னன் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு கோயில் கட்டினான். வல்லாள மகராஜா இத்திருக்கோயிலை பெரிதாகக் கட்டி பூஜை காரியங்கள் சிறப்பாக நடைபெற நிலபுலன்கள் எழுதி வைத்தான்.

கல்வெட்டுச் சிறப்பு:
திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் உள்ள கலியாணகுறடு என்ற மண்டபத்தில் நவகைலாயங்கள் பற்றிய செய்திகளும், ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி கோயிலிலும் நவகைலாயம் குறித்த கல்வெட்டுகள் உள்ளது. விஜயநகர பேரரசின் தளபதி விட்டலராயன் இத்திருகோயிலுக்கு வந்து வழிபட்டதை விட்டிலாபுரம் கல்வெட்டு கூறுகிறது.
தனிச் சிறப்பு:
இத்திருத்தலத்தில் சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக குருவாக தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். நவகைலாயங்களில் முறப்பநாடு நடு கைலாயமாகும். இத்திருத்தலம் குருவுக்கான தலமாகும். பிருகண்ட முனிவர் பாதம் பட்ட இடமும் காஞ்சனமாலை மோட்சம் பெற்றதும் மார்க்கண்டேயன் பூஜை செய்ததும் இவ்விடமே ஆகும்.
இங்குள்ள கோயிலில் சுவாமிக்கு எதிரே உள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர்.
தாமிரபரணி நதி இவ்விடத்தில் தெற்கு நோக்கி தட்சிண கங்கையாக செல்வது தனிச் சிறப்பாகும். இங்குள்ள கைலாச நாதர் குரு அம்சமாக இருப்பதால் சுவாமிக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்யப்படுகிறது.
அமைவிடம்:
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் திருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் முறப்பநாடு உள்ளது. ஊரின் வடக்குப் பக்கம் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் திருக்கோயில் அமைந்து உள்ளது.
இறைவன்: அருள்மிகு கைலாசநாதர்
இறைவி: அருள்மிகு சிவகாமி அம்மன்
தீர்த்தம்: தட்சிணகங்கை
தலவிருட்சம்: அரசமரம்.












Click it and Unblock the Notifications