For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம் நடராஜா கோவிலில் இன்று ஆனித்தேரோட்டம் – நாளை ஆனித் திருமஞ்சனம்

Google Oneindia Tamil News

சிதம்பரம்: சிவ பெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்ச பூதத்தலங்களில் ஆகாய தலமாகவும் பக்தர்களால் போற்றப்படும் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான ஆனித்தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீ நடராஜ மூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் தனித்தனி தேர்களில் வலம் வந்தனர். உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரரும் தனித்தனி தேர்தலில் வலம் வந்தனர். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு 5 தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

தில்லை சிதம்பரம் நடராஜா கோவிலில் மார்கழி மாத திருவாதிரை, ஆனி திருமஞ்சனம் ஆகிய இரண்டு விழாக்களும் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். ஆனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மையும் அப்பனும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்

Aani Thirumanjanam: Car festival in Chidambaram Natarajar temple

இன்று அதிகாலை 05.00 மணியிலிருந்து 05.30 மணிக்குள், மிதுன லக்னத்தில், ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜர் அழகுமிகு தோற்றத்தில் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் திருக்கோலத்தோடு சித்ஸபையின் கனகசபையிலிருந்து தேருக்குப் புறப்படும் திருக்காட்சி நடைபெற்றது. ஸ்ரீ நடராஜ மூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் தனித்தனி தேர்களில் வலம் வருகின்றனர். உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரரும் தனித்தனி தேரில் வலம் வருகின்றனர். தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தை தொடர்ந்து தேரின் நடுவில் உள்ள ஊஞ்சலில் ஸ்ரீ நடராஜர் அமர்த்தப்படுவார். தேரில் அமர்த்தியபிறகு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்க, வேத கோஷங்கள் முழங்க, திருமுறைகள் ஓதப்பட, நாதஸ்வரம் இன்னிசைக்க, உற்சாக கோஷங்கள் நிரம்ப, நடராஜரின் ஆட்டத்திற்கு தாளம் இசைப்பது போல தேரில் இருக்கும் மணிகள் ஒலியெழுப்பும்.

Aani Thirumanjanam: Car festival in Chidambaram Natarajar temple

நடராஜர் சுவாமி மற்றும் சிவகாமசுந்தரி அம்மன் தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருவது இரு யானைகள் அழகாக அசைந்து அசைந்து வருவதைப் போன்ற இக்காட்சியை காணும்போது, "காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்" என்று திருநாவுக்கரசர் கூறியதே நினைவுக்கு வருகின்றது. மதியம் உச்சிகால பூஜை தேரிலேயே நடைபெற்று நிலைபெறும். சற்றே இடைவெளிக்குப் பிறகு, செம்படவர் மண்டகப்படி எனும் மீனவர்கள் எடுத்துவரும் மண்டகப்படி எனும் மரியாதைகளை நடராஜர் ஏற்று பிறகு தேர் மறுபடி கிளம்பி, ஈசான திசை திரும்பி, தேர் கிளம்பிய இடத்திற்கே வந்து நிலைபெறும்.

நாளை 8ஆம் தேதி திங்கள் கிழமை அதிகாலை முதலே பல வித வாசனை பொருட்களால் அபிஷேக தீபாராதனை நடைபெற்று தில்லை நடராஜருக்கு கண்கவர் அலங்காரத்தில் தரிசனம் நடைபெறும் . அபிஷேகம் முடிந்த பிறகு இறைவனும், இறைவியும் ஆனந்தத் தாண்டவமாக நடனம் ஆடியபடி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். இந்த நடனத்தை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இதனால்தான் இந்த நடனத்தை காண தேவர்களும், முனிவர்களும் படையெடுத்து வந்து ஆவலோடு காத்திருப்பார்கள் என்பது ஐதீகமாகும்.

Aani Thirumanjanam: Car festival in Chidambaram Natarajar temple

அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அரிய அணிமணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு அர்ச்சனை ஆராதனைகள் நடத்திய பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தபிறகு, மதிய வேளையில், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்ஸபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் அற்புத காட்சிதான் ஆனித் திருமஞ்சன மஹா தரிசனக் காட்சி ஆகும்.

இந்தக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அதை நேரில் கண்டுகளித்தால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்படும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள்.

நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியை பெற முடியும். அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.

இந்நாளில் சிவபெருமானை தரிசனம் செய்வோருக்கு அளவற்ற பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி. கன்னி பெண்கள் தரிசனம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.சுமங்கலி பெண்கள் தரிசனம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் பெற்று நீடூழி வாழலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். தில்லையில் திருநடம்புரியும் சித்ஸபேசரின் திருநடன திருக்காட்சியைக் கண்டவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள். வேண்டிய வரங்களும், நீடித்த ஆயுளும், பெரும் செல்வமும் அருளக்கூடிய தில்லை நடராஜரின் தேர் தரிசனக் காட்சியை அனைவரும் கண்டு மகிழ்வோம்.

English summary
The important festival in Chidambaram Aani Tirumanjanam on July 8, 2019 In Chidambaram. Today car festival in Chidambaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X