Athi varadar History: 40 ஆண்டுகளுக்குப் பின் காட்சி கொடுத்த அத்தி வரதர் குறித்த வரலாறு
40 ஆண்டுகளுக்குப் பின் காட்சி கொடுத்த அத்தி வரதர் வரலாறு குறித்த தகவல்களை இந்த பக்கத்தில் காணுங்கள்.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. கோவிலின் வடக்கே உள்ள நூறுகால் மண்டபத்தில் அனந்தசரஸ் எனப்படும் நீராழி மண்டபத்தில் நீரில் மூழ்கியபடி கருங்கற்கலால் ஆன பாறைக்குள் அத்திமரத்தால் ஆன அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் இருக்கும் இவர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த பெருமாளை, மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பிரம்மா நடத்திய அசுவமேத யாகத்தில் இருந்து அவதரித்தார் என நம்பப் படுகிறது. பெரும்தேவி தாயார் பிருகு மஹரிஷி நடத்திய புத்திர காமஷ்டி யாகத்தில் அவதரித்தாக வரலாறு. இந்த பெருமாளிடம் நேரடியாக பேசும் பேறு பெற்றவராக, திருக்கச்சி நம்பிகள் திகழ்ந்தார்.
தினமும் காலை கிணற்றில் இருந்து பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வந்து, சேவை செய்து வந்த உடையவர் ராமானுஜர், பெருமாள் உத்தரவின்படி ஸ்ரீரங்கம் சென்றதாக கூறப்படுகிறது.
இக்கோவிலில் இரு ராஜகோபுரங்கள் உள்ளன. மன்னர்கள் காலத்தில் கிழக்கு ராஜ கோபுரம் தான் பிரதான நுழைவு வாயிலாக இருந்துள்ளது. இந்த கோவிலில் அனந்தசரஸ், பொற்றாமரை என, இரு திருக்குளங்கள் உள்ளன.இக்கோவிலில் தற்போது மூலவராக அருள்பாலித்து வரும் வரதராஜப்பெருமாள், தேவராஜ சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். இப்பெருமாள் பிரதிஷ்டை செய்த பின், அத்தி மரத்தால் ஆன, ஆதி அத்தி வரதர் திருஉருவச்சிலை, கோவில் வளாகத்தில் உள்ள, அனந்தசரஸ் திருக்குளத்தில் அமைந்துள்ள, நான்கு கால் மண்டபத்தில், ஜலசயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
அத்திவரதர் தரிசனம்
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்தி வரதர், 1979ஆம் ஆண்டு ஜூலை, 2ல் எழுந்தருளினார். அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்த விழா ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோவிந்தா முழக்கம்
இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலையை அர்ச்சகர்கள் வெளியே எடுத்து வந்தனர். பின்னர் சிலையை வசந்த மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதரை தரிசித்த பக்தியில் வரதா... வரதா... கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அத்தி வரதருக்கு சிறப்பு பூஜைகள், சடங்குகள் நடந்து வருகின்றன.
ஜூலை 1 முதல் தரிசனம்
அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு தற்போது அனுமதி கிடையாது. வருகிற 1ஆம்தேதி காலை முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலிக்கிறார்.
அத்திவரதர் சிலை திருக்குளத்தில் இருந்து வெளியே எடுக்கும் நிகழ்ச்சிக்கு அர்ச்சர்கள், அற நிலையத்துறை அதிகாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புக்கு கோவிலின் வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சுதந்திரம் அடைந்த பின் 2 முறை
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டாவது முறையாக அனந்தசரஸ் குளத்தில் இருந்து அருள்பாலிக்க அத்திவரதர் எழுந்தருளி உள்ளார். கடந்த 1979ஆம் ஆண்டு அத்திவரதர் விழாவின்போது எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது. தற்போது அத்திவரதர் எழுந்தருளியுள்ள நிலையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.