ஆடல்வல்லன் நடராஜனுக்கு ஆனித்திருமஞ்சனம் - சிவ ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம்
ஆடல்வல்லன் நடராஜருக்கு இன்று ஆனித்திருமஞ்சனம் நடைபெறுகிறது. சிவ ஆலயங்களில் நடைபெற்ற அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரம்: ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். ஆகவே சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்நானம். அதாவது மங்கள நீராட்டு. பங்குனியைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது. சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது. நடராஜர் ஆலயத்தில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வைக் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஸ்ரீநடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா!

ஆனித்திருமஞ்சனம்
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஆனி திருமஞ்சன விழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தா்கள் இன்றி விழா கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது. அதே வேளையில் சாமிக்கு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தேரோட்டம் ரத்து
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் தேரோட்டம் நேற்று கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. பின்னர் காலை 9 மணி முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்படி பக்தர்கள் கீழ சன்னதி வாசல் வழியாக கோவிலுக்கு வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சுப்பிரமணியா் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளை தரிசனம் செய்தனர்.

நடராஜருக்கு அபிஷேகம்
இன்று ஆனிதிருமஞ்சன விழா நடைபெற்றது. தரிசன நாளான இன்று ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்பு மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர்ந்து 2வது ஆண்டாக ஆனி திருமஞ்சனம் பக்தர்கள் இன்றி நடைபெற்றதால் பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

திருமஞ்சனம் சிறப்பு
சாதாரணமாக குளியலுக்கு காரகர் நீர் ராசி அதிபதியான சந்திரன் ஆகும். ஆனால் திருமஞ்சனம் என்பது பலவித வாசனை பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் திருமஞ்சனத்தின் காரகர் சுக்கிரன்தான்.

திருமண சுபகாரியம்
நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்றும் ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், வளமும் கூடும் என்பதும் நம்பிக்கையாகும்.












Click it and Unblock the Notifications