குரு பெயர்ச்சி பலன் 2022 : குரு பலத்தால் காதல், கல்யாணம் யோகம் யாருக்கு தேடி வரும் தெரியுமா?
கும்ப ராசியில் சஞ்சரித்த குருபகவான் இனி இடப்பெயர்ச்சியாகி மீன ராசியில் சஞ்சரிப்பார். குரு பகவானின் சுப பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண யோகம் கைகூடி வரும் என்று பார்க்கலாம்.
சென்னை: கும்ப ராசியில் சஞ்சரித்த குருபகவான் இனி இடப்பெயர்ச்சியாகி மீன ராசியில் சஞ்சரிப்பார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப் போகிறார். குருவின் பார்வை இந்த முறை கடகம், கன்னி,விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. குரு பலம் கிடைப்பதால் சிலருக்கு காதல் மலரும் கல்யாண யோகமும் கை கூடி வரும். இந்த குரு பெயர்ச்சி குரு பார்வையால் யாரெல்லாம் காதல் பறவைகளாக சிறகடித்துப்பறக்கப் போகிறார்கள், கல்யாணம் முடிந்து இல்லறத்தில் இணையப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை', குரு பார்வை தோஷ நிவர்த்தி' என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது. குரு தனது 5ஆம் பார்வையால் கடக ராசியை பார்க்கிறார். 7ஆம் பார்வையால் கன்னி ராசியை பார்க்கிறார். 9 ஆம் பார்வையால் விருச்சிக ராசியை பார்க்கிறார்.
சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ல் தொடங்கி மே 10 வரை நடைபெறும்! விடுமுறை நீங்கலாக மொத்தம் 22 நாட்கள்!
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் கல்வி, வேலைக்குப் பிறகு அதிகம் விரும்புவது நல்ல வாழ்க்கைத்துணையைத்தான். மகனுக்கோ,மகளுக்கோ 21 வயதிற்கு மேல் திருமணத்திற்காக ஜாதகக் நோட்டை எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் பெற்றோர்கள். ஜோதிடர் முதலில் பார்ப்பது குரு பலம் வந்து விட்டதா என்றுதான். குருவின் பார்வையே பலம்தான். அதுதான் திருமண யோகம், குழந்தை பாக்கியம் யோகத்தை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே உங்கள் ராசி நாதன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பான அம்சமாகும். குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான 3ஆம் வீடு, பூர்வீக புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீடு, களத்திர ஸ்தானமான 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பார்வையால் உங்கள் வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குருவின் பார்வை பலத்தால் பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும்.
கடகம்
கடந்த சில ஆண்டுகாலமாகவே சிரமத்தை சந்தித்து வரும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது. பாக்கிய குருவாக 9ஆம் இடத்தில் குரு அமர்வது சிறப்பானது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். ராசிக்கு 3ஆம் இடம், 5 ஆம் இடங்களின் மீது குருவின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களினால் வருமானம் உண்டு. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். குழந்தைகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 7ஆம் வீட்டில் அமர்ந்து தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார் குருபகவான். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். குருபலன் வந்து விட்டது திருமணம் கைகூடி வரும். காதல் வெற்றியடையும். 9ஆம் பார்வையால் உங்களின் முயற்சி ஸ்தானமான 3 ஆமிடத்தை பார்வையிடுவதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். 5ஆம் பார்வையால் உங்க லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானம் 9ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வையிடுகிறார். உங்களுக்கு குரு பலன் வந்து விட்டுவிட்டது. வெளியூர், வெளிநாடு பயணம் செல்லக்கூடிய நேரம் வந்து விட்டது. 11 ஆம் வீட்டை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும். திருமண யோகமும் குழந்தை பாக்கியமும் கைகூடி வரப்போகிறது.
மகரம்
மகர ராசிக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் அமர்கிறார். குருவின் பார்வை 11ஆம் வீடான லாப ஸ்தானம். 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம், 7ஆம் இடமான களத்திர ஸ்தானங்களின் மீது விழுகிறது. காதல் மலரும் காலம் இது. காதல் கணிந்து கல்யாணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் சத்தம் கேட்கும். 9ஆம் இடத்தை குரு பார்வையிடுவதால் வெளிநாடு செல்லும் யோகம் வரும். செய்யும் தொழிலில் லாபம் வரும். மூத்த சகோதரரின் மூலம் நன்மைகள் நடைபெறும்.
மீனம்
மீனம் ராசிக்கு இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில் இருந்த குரு ஜென்ம குருவாக அமர்கிறார். ராசி நாதன் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, 9ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும். மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அப்பாவின் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. சிலரது மனதில் காதல் மணியடிக்கும். பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் கை கூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.