அனுமன் ஜெயந்தி: 1 லட்சம் வடைமாலையில் ஜொலிக்கப் போகும் நாமக்கல் ஆஞ்சநேயர் #HanumanJayanti
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
நாமக்கல்: மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இந்த ஆண்டு நாளை மறுதினம் ஜனவரி 5ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயங்களில் அவருக்கு அணிவிக்க ஒரு லட்சம் வடைகள், லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார். ராம நாமம் கேட்கும் இடங்களில் அஞ்சநேயர் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும்.
திதிகளில் புண்ணியமான திதி அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி 5ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
அனுமன் ஜெயந்தி விழா
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 5ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
அனுமனுக்கு லட்சத்து எட்டு வடைமாலை
ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி அங்குள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 32 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வடைகளை தயாரிக்க 2,250 கிலோ உளுந்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் 650 கிலோ நல்ல எண்ணெய், 35 கிலோ மிளகு, சீரகம், உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
சுசீந்திரம் ஆஞ்சநேயர்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள 18 அடி ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகர் மற்றும் தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், பகல் 11 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை நடக்கிறது.
16 வகையான பொருட்களால் அபிஷேகம்
சனிக்கிழமை ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று காலை 5 மணிக்கு ராமர் சன்னதியில் அபிஷேகம், 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஷோடச அபிஷேகம் நடக்கிறது. இதில் பால், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு, குங்குமம், களபம், மஞ்சள், நல்லெண்ணெய், பன்னீர், சந்தனம், மாதுளம்சாறு, எலுமிச்சம் சாறு, கரும்புச்சாறு என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. மேலும் நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் மாலையில் புஷ்பாபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 2 லட்சத்து 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது.
மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து அனுமான் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறை தசமி திதியன்று அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். ' ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.