உங்க அப்பா தான் உங்க ரோல் மாடலா? உலக தந்தையர் தினம் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
சென்னை: இன்று உலகம் முழுவதும் சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) தந்தையர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
1882-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் மற்றும் எல்லன் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் சொனாரா ஸ்மார்ட் டோட். சொனாரா 16 வயதை தொடும் போது ஆறாவது பிரசவத்திற்கு சென்ற அவரது தாய் எல்லன் மரணமடைந்தார். அன்று முதல் மறுமணம் செய்து கொள்ளாமல் தனது ஆறு பிள்ளைகளுக்கும் தாயும், தந்தையுமாக இருந்து காப்பாற்றினார் வில்லியம் ஜாக்சன். தன் தந்தையின் அர்ப்பணிப்பு உணர்வு சொனாராவை பெரிதும் கவர்ந்தது.
இந்நிலையில் 1909-ஆம் ஆண்டு சர்வதேச அன்னையர் தின கொண்டாட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதை அறிந்த சொனாரா, தன் தந்தையின் தியாகம், அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என வாதிட்டார். தன் தந்தையின் பிறந்தநாள் தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் ஆவண செய்தார். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து சர்வதேச தந்தையர் தினமானது, ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 1972-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான நிக்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்தார். அன்று சொனாரா எடுத்த முயற்சி, இன்று நம் கனவுகளுக்கு உருவம் கொடுத்த தந்தைகளை நினைவு கூற ஒரு சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது.
தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது. மனைவியின் வயிற்றில் காதை வைத்து, நிறமறியா, முகமறியா பிள்ளையுடன், காதோடு பேசி மகிழும் தந்தையின் பாசம்... தரணியெல்லாம் பேசும். மழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து... வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம். எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்.
தந்தையன்றி வேறு யாருக்கு வரும்? "விடு... விடு...” என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும் அந்த பெரிய உள்ளம்... இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம். ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்... பத்துமாதம் கருவில் சுமப்பவள் தாய். அதன்பின் நாமாக நடமாடும் வரை நம்மை தோளில் சுமக்கும் தந்தைக்கு ஒரு நாளை மட்டும் ஒதுக்கி மீதி நாளெல்லாம் சுயநலத்தோடு சுற்றித்திரியும் மேலைநாட்டு கலாச்சாரபடி இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் கொண்டாட்டங்கள் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
புராணங்களில் தந்தை:
நமக்கு முதல் குரு நமது தந்தையாவார். இந்த உலகத்தை நமக்கு உணர்த்துபவரும் நமது தந்தைதான் என்பது அனைவரும் அறிந்ததே! அதன் பிறகு குரு நமக்கு அனைத்து நன்மை தீமைகளையும் தந்தை ஸ்தானத்தில் நின்று போதிப்பதால் குரு நமது மற்றோரு தந்தையாகிறார். இதை விளக்கும் புரான கதை இராமாயணத்தில் உள்ளது.
விஸ்வாமித்திரர். சீதையின் தந்தை ஜனகரிடம் ராமரை அறிமுகப்படுத்தும்போது தசரதர் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக ராமன் பிறந்ததைக் கூறினார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இந்த ராமன் தசரதருக்குப் பெயரளவில் மட்டுமே புத்திரன். ராம சகோதரர்கள் நால்வரையும் வளர்த்த பெருமை, அவர்களது குலகுரு (ஆசிரியர்) வசிஷ்டரையே சாரும், என்று புகழ்ந்தார்.
ப்ரஸ்நோபநிஷத் என்னும் உபநிஷதத்தில் சீடர்கள், த்வம் ஹி ந: பிதா என்று சொல்லி குருவை வணங்கினர். இதற்கு நீங்கள் அன்றோ எங்களின் தந்தை என்று பொருள். இந்த ஸ்லோகத்தின் அடிப்படையிலும், விஸ்வாமித்திரரின் சொல்லின் அடிப்படையிலும் ஆசிரியரும் தந்தை ஸ்தானத்துக்கு சமமானவர் என்பது தெளிவாகிறது.
ஜோதிட ரீதியாக தந்தை-மகன் உறவு:
1. ஜோதிடத்தில் தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன். தந்தையை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவம் எனப்படும் பித்ரு ஸ்தானம் ஆகும். ஒரு தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பாங்கு, அரவனைத்து செல்வது, ஆளுமை திறன் போன்றவை சூரியனிடமிருந்தே ஏற்படுகிறது. ஒரு ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சூரியனின் நிலையை வைத்து அவரின் தந்தை மீது வைத்திருக்கும் பற்று, தந்தையின் நிலை ஆகியவற்றை அறியமுடியும். என்வே அன்னிய நாட்டு கலாசாரப்படி கொண்டாட ஆரம்பித்தாலும் அது நமது நாட்டு கலாசாரபடி பித்ரு காரகன் எனப்படும் சூரியனின் நாளில் அமைந்தது சற்றே ஆறுதலான விஷயம்.
2. நமக்கு முதல் குரு நமது தந்தை என்பதாலும் நமது இரண்டாவது தந்தை நமது குரு என்பதாலும் கால புருஷ ஜாதகத்தில் குருவின் வீடான தனுசு ராசியை ஒன்பதாம் வீடாகவும் அதுவே பித்ரு ஸ்தானமாகவும் விளங்குகிறது. அதே போல அறிவை குறிக்குமிடம் ஐந்தாம் பாவம். அதனை தந்தையை குறிக்கும் சூரியனின் வீடாகவும் வருகிறது. மேலும் இரண்டு வீடுகளும் திரிகோண பாவங்களாகவும் ஆனது குறிப்பிடத்தக்கது.
3. மேலும் புத்திர காரகன் குருவுக்கு ஓன்பதாமிடத்தையும் பித்ரு காரகன் சூரியனுக்கு ஐந்தாம் பாவத்தையும் சூரியன் உச்சமாகும் மேஷத்தை செவ்வாய்க்கும் கால புருஷ ராசியில் ஒதுக்கியதும் ஐந்தாம் பாவமும் ஒன்பதாம் பாவமும் பாவாத்பாவபடி ஐந்துக்கு ஐந்தாகவும் மூன்று ராசிகளும் ஒன்பதிற்க்கு ஒன்பதாகவும் அமைந்தது சிறப்பாகும்.
4. சூரியனை ஆத்மகாரகன் என ஜோதிட சாஸ்திரம் சிறப்பாககூறுகிறது. ஒரு தாயின் வயிற்றில் ஒரு ஆத்மா உருவாக காரணம் தந்தையாவார். ஒரு குழந்தை சுமந்தால் தான் தாய் எனும் ஸ்தானத்தை ஒரு பெண் பெறுகிறாள். எனவே தந்தையை குறிக்கும் சூரியனை ஆத்மகாரகன் என்பது மிகவும் சரியானதாகும்.
5. தாய்மை என்பது ஈடு இணையற்றது என்றாலும் அதனை ஏற்படுத்தி கொடுப்பவர் தந்தை என்பதையும் தந்தையை சார்ந்தே தாய் இருக்கிறாள் என்பதையும் சுட்டிகாட்டும் விதமாகவே காலபுருஷ ராசியில் தாயை குறிக்கும் சந்திரன் மற்றும் தந்தையை குறிக்கும் சூரியனின் வீடுகள் அருகருகே அமைந்துள்ளது.
ஜாதகப்படி தந்தை-மகன் உறவு:
1. ஒருவர் ஜாதகத்தில் எந்த ராசி லக்னமானாலும் பித்ரு காரகன் சூரியன் 6/8/12 மற்றும் பாதக சம்மந்தம் பெறாமல் ஆட்சி உச்சம் மற்றும் நட்பு வீடுகளில் நின்று விட்டால் ஜாதகரின் தந்தை செல்வாக்கு, அதிகாரம் மற்றும் அந்தஸ்து மிகுந்தவராகவும் ஜாதகரின் மேல் அளவு கடந்த பாசமுடையவராக இருப்பார். அதே நேரம் சூரியன் 6/8/12 வீடுகளில் இருந்து எட்டாம் அதிபதி ஒன்பதாம் வீட்டிலும், பன்னிரெண்டாம் அதிபதி லக்னத்திலும் ஆறாம் அதிபதி ஐந்திலும் இருந்தால் தந்தையும் மகனும் பரம விரோதம் பாராட்டுபவர்களாக இருப்பார்கள்.
2.ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சந்திரனோடு சேர்க்கை பெற்று நின்றால் ஜாதகரின் தந்தை மிகுந்த. செல்வாக்குடன் வசதியாக இருப்பார். மேலும் ஜாதகரின் மேல் மிகுந்த பாசத்துடன் விளங்குவார். ஜாதகரின் தேவையை முன்கூட்டியயே அறிந்து அதனை பூர்த்தி செய்வார்.
3.ஒருவர் ஜாதகத்தில் சூரியன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று நின்றால் தந்தை மிகுந்த அதிகாரம் மிக்கவராகும் அரசியல் அரசாங்க செல்வாக்கு மிகுந்தவராக இருப்பார். முன்கோபியாகவும் விளங்குவார். தந்தை பாசத்தை நீரு பூத்த நெருப்பாக வைத்திருந்தாலும் கோபம்தான் முதலில் வெளிவரும்.
4.ஒருவர் ஜாதகத்தில் சூரியன் புதனோடு சேர்க்கை பெற்று நின்றால் தந்தையும் மகனும் மிகுந்த அறிவாளிகளாக திகழ்வர் என்றாலும் தந்தை எல்லாவிஷயங்களுக்கும் கணக்கு பார்க்கும் குணம் கொண்டிருப்பார்.
5. ஒருவர் ஜாதகத்தில சூரியன் குருவுடன் சேர்க்கை பெற்று நின்றால் ஜாதகரின் தந்தை உயர்ந்த குலத்துல் பிறந்து ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுபவராக இருப்பார். ஜாதகரும் ஆனமீக நாட்டம் கொண்டவராக இருப்பார். ஆனால் பாசத்தின் மிகுதியால் "சூச்சூ" போனால் கூட கூடவே வந்திடுவார்.
6. ஒருவர் ஜாதகததில் சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை பெற்று நின்றால் அவரது தந்தை மிகவும் பணவசதி கொண்டவராகவும் "ஜாலியான" மனிதராகவும் விளங்குவார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் கடன் வாங்கியாவது பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவார்.
7.சூரியனும் சனைஸ்வர பகவானும் தந்தை-மகன் உறவென்றாளும் இருவரும் பரம விரோதிகளாவர். எனவே சூரியனும் சனியும் சேர்க்கை எந்தவிதத்தில் அமைந்தாலும் தந்தை-மகன் இருவரும் எப்பொழுதும் சன்டை போட்டுக்கொண்டு விரோதத்தோடுதான் இருப்பார்கள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் செய்யவேண்டிய கடமைகளை விட்டுகொடுக்காமல் செய்வார்கள்.
8.சூரியனோடு ராகு/கேது சேர்க்கை பெற்றால் மகன் குலவழக்கத்திற்க்கு புறம்பான விஷயங்களை செய்ய நேரும். அதனால் தந்தைக்கும் மகனுக்கும் ஒரு சுமுகான உறவு இருக்காது.
சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகவும் தந்தையால் அனுகூலம் ஏற்படவும் வணங்கவேண்டிய கோயில்கள்:
1.தஞ்சைக்கு அருகிலுள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வணங்கிவர சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
2.சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் ஆலயம் சூரிய ஸ்தலமாகும். ரவி என்றால் சூரியன் என்று பொருள். இங்கு ஞாயிற்றுகிழமைகளில் சூரிய ஹோரையில் வணங்கிவர சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
3.சூரியனின் அதிதேவதை சிவன் என்பதால் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபடுவது சூரியனால் ஏற்படும் தோஷங்களை போக்கி நன்மையளிக்கும்.
4. தந்தை-மகன் உறவு சிறக்க விரும்புபவர்கள் ஸ்ரீ ராமரையும் அவரது ஜாதகத்தையும் பூஜித்துவர தந்தை-மகன் உறவு சிறக்கும். ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் கடக லக்னமாகி பித்ரு ஸ்தானாதிபதி குரு லக்னத்தில் உச்சமாகி தந்தை காரகனாகிய சூரியனும் உச்சமாகி நிற்கும் அமைப்பை கொண்டதும் ஸ்ரீ ராமர் தனது தந்தை தசரதரிடம் கொண்ட பக்தியும் குறிப்பிடத்தக்கது.மேலும் ஸ்ரீ ராமர் ரகு குலம் எனும் சூரிய வம்சத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5.தந்தையை குறிக்கும் சூரியன் உச்சமாகும் இடம் மேஷம் என்பது அனைவரும் அறிந்தது. அந்த மேஷத்தின் அதிபதி செவ்வாய். அதன் அதிதேவதை முருக பெருமான். முருக பெருமான் தந்தைக்கு உபதேசம் செய்த ஸ்தலமான சுவாமி மலை கும்பகோணத்திற்க்கு அருகில் உள்ளது. இங்கு சென்று அருள்மிகு சுவாமிநாத ஸ்வாமியை வணங்கிவருவது குழந்தைகளால் தந்தைக்கும் தந்தையால் குழந்தைக்கும் பெருமை சேர்க்கும் என்பது உறுதி.
6.வயதான தந்தையை கொண்டவர்கள் அவருக்கு தேவையான பொருட்களையும் தேவைகள், மருத்துவ சிகிச்சைகள் விருப்பங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் நிறைவைற்றுவது.
7.தந்தை இல்லாதவர்கள் பித்ருகடனை சரிவர செய்வது. மற்றும் தந்தை வயதில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்வது, மூக்கு கண்ணாடி, மருத்துவ சிகிச்சைகள் செய்வது மற்றும் விருப்பமான உணவுகளை வழங்குவது.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786