காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழா 21ல் தொடக்கம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை
பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா வரும் 21ஆம் தேதி தொடங்குகிறது. 24ஆம் தேதி மாங்கனி இறைக்கும் இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி மாங்கனி திருவிழா 5 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
கொரோனா தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு கோவிலிலுக்குள் மாங்கனித்திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு வரும் 21ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்குகிறது.
சிவபெருமானை போற்றி வணங்கிய 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட புகழ் பெற்றவருமான புனிதவதியார் எனும் ஸ்ரீகாரைக்காலம்மையாரின் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வருகிற 21ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்குகிறது. 22ஆம் தேதி காலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 23ஆம் தேதி மாலை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், 24ஆம் தேதி பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடும் நடைபெறும்.
மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சியும், 25ஆம் தேதி காரைக்கால் அம்மையாருக்கு, இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. மாறாக கோவில் உபயதாரர்கள், அறங்காவல் குழுவினர், முக்கியஸ்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.