புத்தாண்டு ராசி பலன்: தொட்டதெல்லாம் ஹிட்டு.. சிம்மம் ராசிக்கு எப்படி இருக்கிறது 2025?
புத்தாண்டு 2025: 2024 ஆம் ஆண்டின் கடைசி இரவில் இருக்கிறோம். விரைவில் 2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று 12 ராசிகளும் எதிர்பார்ப்பில் இருப்பார்கள். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் சிம்மம் ராசிக்கான பலன்களை பார்க்க உள்ளோம்.
சிம்மம் ராசியினர் நிர்வாகத்திறமையும், கம்பீர தோற்றமும் கொண்டவர்கள். 2025 ஆம் ஆண்டு சிறப்பாக பிறந்துள்ளது. புத்தாண்டு உங்கள் ராசியின் ஐந்தாவது இடத்தில் பிறந்துள்ளது. அதனால் தொட்டது எல்லாமே துலங்கும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். வருடப் பிறப்பிலேயே உங்களுக்கு குரு பகவான் சாதகமாக இருப்பதால் பணவரவு நன்றாக இருக்கும்.

குரு பகவான் பத்தாவது இடத்தில் இருப்பது நல்ல யோகம் கொடுக்கும். அதேநேரத்தில் அந்த பத்தாம் இடம் சில நேரம் மனதில் தேவையில்லாத பயத்தை கொடுக்கும். மனம் ஒருவித பதற்றத்துடனே காணப்படும். இருப்பினும் மே 14 ஆம் தேதிக்கு பிறகு குரு பகவான் உங்களுக்கு சாதகமாக லாப ஸ்தானத்தில் வந்து அமரப் போகிறார். மே மாதம் 14 ஆம் தேதிக்கு பிறகு எல்லாமே நன்றாக நடக்கும்.
பணவரவு திருப்தியாக இருக்கும். உத்யோகத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகும். காத்திருப்பில் இருந்த பதவி உயர்வு, சம்பளம் உயர்வு ஆகியவை அடுத்தடுத்து தேடி வரும். சிலருக்கு எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். உங்களை மரியாதைக் குறைவாக நடத்தியவர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். இத்தனை நாட்கள் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் கூட இனி உங்களை புரிந்து கொள்வார்கள்.
வருடப்பிறப்பிலேயே சுக்கிரன் சாதகமாக இருப்பதால் 2025 மொத்தத்தில் அமோகமாக இருக்கும். நீண்ட காலமாக திருமணம் நடைபெறவில்லை, குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்கள் எல்லாம் இனியும் கவலைப்பட தேவையில்லை. 2025 ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு திருமண யோகம் கூடிவரும். அதேபோல குழந்தை பாக்கியமும் கைக்கூடும். பணியில் எதிர்பார்த்த ஏற்றங்கள் நிச்சயம் உண்டு.
பல்வேறு காரணங்களால் சிலருக்கு சொந்த வீடு, மனை உள்ளிட்ட சொத்து வாங்குவதில் தடை இருந்திருக்கும். 2025 ஆண்டில் அந்த தடைகள் முழுமையாக நீங்கி வீடு, மனை உள்ளிட்ட சொத்துகள் வாங்குவதற்கான அமைப்பு உருவாகும். வியாபாரத்தில் இருந்த தடங்கல்களும் நீங்க வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
சனிப்பெயர்ச்சி சற்று சுமாராகத்தான் உள்ளது. மார்ச் மாதம் 29 ஆம் தேதிக்கு பிறகு சனி உங்களுக்கு அஷ்டமத்து சனியாக வரவுள்ளார். அதனால் எல்லாவற்றிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக முதலீடு சார்ந்த விஷயங்களில் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. முதலீட்டில் கவனமாக இல்லாவிடின் தேவையில்லாத சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்களின் மகன், மகளுக்கு திருமண வாய்ப்பு, எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் உள்ளது. சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் எதிர்பார்த்த வெற்றி நிச்சயம் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டில் காரியங்கள் தடையின்றி வெற்றியடைய பைரவர் வழிபாடு அவசியம். கோதுமை தானம் வழங்குவது மனச்சங்கடங்களை நீக்கும். கைகளை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications