மகாளய அமாவாசை 2020: கொரோனா தடையை மீறி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் - கோவில்களில் வழிபாடு
மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் உள்ள கோவில்களில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
Recommended Video
அமாவாசை திதி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் குல தெய்வ வழிபாட்டிற்கும் ஏற்ற நாள். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றது. எந்த அமாவாசையில் திதி கொடுக்க மறந்தாலும் மகாளய பட்ச காலத்திலும் மகாளய அமாவாசையிலும் திதி கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியை பெறலாம்.
மகாளய அமாவாசையில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கி நல்லது நடைபெறும். பித்ரு தோஷம் உள்ளவர்கள் பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டவர்கள் திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.

காத்திருந்து சாமி தரிசனம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முக்கிய நதிக்கரைகளிலும் கடற்கரைகளிலும் பக்தர்கள் கூடவும் திதி கொடுக்கவும் தடை உள்ளது என்றாலும் அதிகாலை முதலே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கூடினர். அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப குளத்தில் காலை 6 மணி முதல் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவித்தனர். தனி மனித இடைவெளியை கடைபிடித்து தர்ப்பணம் கொடுத்தனர். வீட்டிலேயே தர்ப்பணம் செய்ய அறிவுறுத்திய நிலையில் ஏராளமானோர் கோவில் தெப்பக்குளத்தில் குவிந்தனர்.

சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
ராமேஸ்வரம் கோவிலில் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. கடற்கரை, நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடை நீடிப்பதால் அக்னிதீர்த்தக்கடல் வெறிச்சோடி காணப்படுகிறது. ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சுந்தரமகாலிங்கம் கோவில்
இன்று மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் பொது மக்கள் கூட தடை உள்ளதால் நேற்றே ஏராளமானோர் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். இதே போல் மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபாடு
புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள பல்லவன் குளத்தில் அமாவாசைகள் தோறும் பொதுமக்கள் அதிக அளவு கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியவில்லை என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும் கூட மறுபுறம் அரசாங்கத்தின் வழிமுறையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக திதி கொடுக்க வந்தவர்கள் தெரிவித்தனர். ஏராளமானோர் பல்லவன் குளத்தில் எள்ளும் தண்ணீர் இறைத்து விட்டு அருகில் உள்ள சிவபெருமானை தரிசித்து விட்டு சென்றனர்.

புதுச்சேரியில் திதி கொடுத்த மக்கள்
புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை, குருசுக்குப்பம் கடற்கரைப்பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர். வில்லியனூர் அருகே அமைந்துள்ள திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஆற்றங்கரையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் வழங்க கூடினர். இதனை அறிந்த வில்லியனூர் போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.












Click it and Unblock the Notifications