திருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவராத்திரி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் நவராத்திரி விழா முக்கியமானது. விழா நடைபெறும் 9 நாட்களில் பராசக்தி அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா சனிக்கிழமை தொடங்கியுள்ளது. வரும் 25ஆம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வானவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
அம்மன் நேற்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், இன்று திங்கட்கிழமை கெஜலட்சுமி அலங்காரத்திலும் எழுந்தருளுகிறார். தினசரியும் ஒவ்வொரு அலங்காரத்திலும் எழுந்தருளும் அம்மன் 25ஆம் தேதியன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். அன்று மாலை உண்ணாமலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாரதனை நடைபெறும்.
விழாவின் நிறைவாக விஜயதசமி அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவராத்திரி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கம்போல சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications