பங்குனி உத்திரம் 2022: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் குவிந்த பக்தர்கள் - அரோகரா முழக்கம்
பங்குனி உத்திரம் விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னை: பார்புகழும் பழனியிலே பங்குனித்தேரோட்டம் என்று சொல்வார்கள். அத்தகைய பெருமை மிகு பழனியில் இன்று பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மலை அடிவாரத்தில் மாலை 4 மணிக்கு தேரோட்டம்; பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரத்திருவிழா உலகமெங்கும் வாழும் தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காவடி சுமந்து கொண்டு பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டகளாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக பக்தர்களின் பங்களிப்பு இல்லாமல் பங்குனி உத்திர விழா களையிழந்து காணப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதால், அனைத்து கோயில்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதே போல், பழனியிலும் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 12ஆம் தேதியன்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளியானை போன்ற வாகனங்களில் சன்னதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளினார். நேற்று மாலை திருஆவினன்குடி கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

தினசரியும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான முருகபக்தர்கள் விரதமிருந்து, கொடுமுடி தீர்த்தம் தரித்து பழனிக்கு பாதயாத்திரை வந்து மலைக்கோயிலில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு தீர்த்தம் நேர்ச்சை செலுத்தி வந்தனர்.
திருக்கல்யாணத்தை தொடர்ந்து தம்பதி சமேதராக அருள்மிகு முத்துக்குமாரசாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித் தேரில் ஏற்றம் செய்யப்பட்டார். பின்னர் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க வெள்ளித் தேர் நான்கு கிரிவீதிகளில் ஆடி அசைந்து உலா வந்தது. தேரின் பின்னே ஓதுவார்கள் திருமுறை பாடல்களை இசைத்தபடி சென்றனர். இன்று மாலை கிரிவலப்பாதையில் பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தைக் காண பக்தர்கள் குவிந்துள்ளனர். கிரிவலப்பாதைகளில் எங்கும் அரோகரா முழக்கம் எதிரொலிக்கிறது.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி,சுவாமிமலை,பழமுதிர்சோலை, மருதமலை உள்ளிட்ட பல்வேறு முருகன் ஆலயங்களிலும் பங்குனி உத்திரத்திருவிழா களைகட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications