பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மேஷம்,ரிஷபம், மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு எப்படி?
மங்களரகமான பிலவ வருடம் பிறக்கப் போகிறது. இந்த பிலவ வருடத்தில் வருட கிரகங்களான குரு, சனி, ராகு கேது ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம்,ரிஷபம், மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
சென்னை: மங்களகரமான பிலவ வருடம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று புதன்கிழமை பிறக்கிறது. ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். பிலவ வருடத்தில் ராஜாவாக செவ்வாய் வருவதால் இரண்டு மரக்கால் மழை பொழியும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. இந்த பிலவ வருடத்தில் குரு பகவான் முதலில் கும்ப ராசியில் அதிசாரமாக பயணித்து பின்னர் மகர ராசிக்கு வந்து மீண்டும் கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார். சனி பகவான் மகர ராசியிலும் ராகு ரிஷப ராசியிலும் கேது விருச்சிக ராசியிலும் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம் கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் பயணம் செய்கிறார் செப்டம்பர் 14ஆம் தேதியன்று வக்ர கதியில் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு திரும்புகிறார். நவம்பர் 11ஆம் தேதி குரு நேர்கதியில் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஏப்ரல் 13ஆம் தேதி 2022ஆம் ஆண்டு மீன ராசிக்கு பயணம் செய்கிறார்.
ராகு கேது பெயர்ச்சி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பயணம் செய்கிறார். சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் மகர ராசியில் பயணம் செய்கிறார். இந்த நான்கு ராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குமா? பண வருமானம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
பூமி காரகன் செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு 2 மற்றும் எட்டாம் வீட்டில் கேது பயணிக்கிறார். சனி பகவான் 10ஆம் வீட்டிலும் குரு பகவான் 10, 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். செப்டம்பர் 14ஆம் தேதி வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உழைப்பிற்கு ஏற்ப வருமானம் வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். திருமண சுப காரியம் நடைபெறும் சிலர் சொந்த வீடு கட்ட முயற்சி செய்யலாம். செப்டம்பர் 14 முதல் நவம்பர் 20 வரை குரு பகவான் மீண்டும் 10ஆம் வீட்டில் பயணம் செய்வதால் தொழில் வேலை விசயமாக வெளியூர் பயணம் செய்வீர்கள். வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம், அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நவம்பர் 20ஆம் தேதிக்கு மேல் குரு பகவான் மீண்டும் லாப ஸ்தானத்தில் நேர்கதியில் பயணிக்கும் போது புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடலாம் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். குல தெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து பூஜை செய்யவும் சனிக்கிழமை அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்கவும். வெள்ளிகிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடவும்.
ரிஷபம்
களத்திரகாரகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு 9ஆம் வீட்டில் ஆண்டு முழுவதும் சனி பகவான் பயணம் செய்கிறார். ராகு உங்கள் ராசியிலும் கேது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பது, பத்தாம் வீட்டிலும் பயணிக்கிறார். செப்டம்பர் 14ஆம் தேதி வரை வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். செப்டம்பர் 14 முதல் நவம்பர் 11, 2021 வரை திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த உடல்நலப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடைபெறும். பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். நவம்பர் 20ஆம் தேதி முதல் குரு பகவான் மீண்டும் நேர்கதியில் இடப்பெயர்ச்சியாக உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணிப்பதால் கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் வந்து செல்லும். இந்த ஆண்டு வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கவும். திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் ஏற்படும்.
மிதுனம்
அறிவுக்காரகன் புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் எட்டாவது வீட்டில் அஷ்டம சனியாகப் பயணம் செய்கிறார். விரைய ஸ்தானத்தில் ராகு, ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. புது வருடம் துவங்கும் போது குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். செப்டம்பர் 14ஆம் தேதி வரைக்கும் குருவின் சஞ்சாரம் உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரப்போகிறது. குருவின் திரு அருளாலும், குருவின் பொன்னான பார்வையாலும் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. திருமணம் சுப காரியம் கை கூடி வரும். செப்டம்பர் 14க்கு முன்பாக திருமணம், சுபகாரியங்களை நடத்தி விடவும். பிள்ளைகள் வாழ்க்கையில் உயர்வு உண்டாகும். வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு மழலை செல்வம் கிடைக்கும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் யோகம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும்.செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரைக்கும் குரு பகவான் மீண்டும் வக்ரமடைந்து அஷ்டம ஸ்தானத்தில் பயணிக்கும் போது கவனமும் விழிப்புணர்வும் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். நவம்பர் 20,2021 முதல் ஏப்ரல் 14,2022 வரைக்கும் குரு பகவான் மீண்டும் நேர்கதியில் பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம். மன வலிமை அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும்.
இந்த ஆண்டு ஆஞ்சநேயருக்கு நெய்தீபம் ஏற்றி வணங்கவும். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்புகள் நீங்கும்.
கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, பிலவ ஆண்டில் உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் கண்டச்சனியாக சஞ்சாரம் செய்கிறார். குரு பகவான் வருட துவக்கத்தில் இருந்து செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை அஷ்டம சனியாக பயணிக்கிறார். ராகு லாப ஸ்தானத்திலும் கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பயணம் செய்கின்றனர். வருட பிற்பகுதியில் குரு வக்ரமடைந்து ஏழாம் வீட்டில் உள்ள சனியோடு இணைந்தாலும் வருட கடைசியில் நவம்பர் 20ஆம் தேதிக்கு மேல் குரு மீண்டும் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த பிலவ ஆண்டில் கடக ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றாலும் இந்த ராசியில் பிறந்த கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. செய்யும் தொழிலில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடுகளைத் தவிர்த்து விடவும். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள், உங்களின் வருமானத்தை அதிக அளவில் வெளியில் சொல்லிக்கொள்ள வேண்டாம். கண் திருஷ்டி காரியத்தடைகளை ஏற்படுத்தும் கவனம் தேவை. இந்த ஆண்டு முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணத்தை பத்திரப்படுத்துங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்களில் கவனம் தேவை. இந்த ஆண்டில் ஒருமுறை குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட காரியத்தடைகள் நீங்கும்.