திருவண்ணாமலை: மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை - புனித நீர் தெளிப்பு
கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை செய்யப்பட்டது. அண்ணாமலையார் பாதத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை: மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதம் பட்டதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அப்போது மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படும். தீபத்திருவிழா முடிவடைந்த நிலையில் நேற்று புனித நீர் தெளிக்கப்பட்டு பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. மகாதீபம் ஏற்றப்பட்ட நாளில் பக்தர்கள் மலைமீது ஏற அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு 11 நாட்கள் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். பிரபல நடிகையும் கூட மலை மீது ஏறி தரிசனம் செய்தார்.
மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதம் பட்டதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அப்போது மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயசித்த பூஜை நடைபெற்றது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மலை உச்சியின் மீது சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து புனித நீரை தெளித்தனர்.