திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் - பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் புது கட்டுப்பாடு
திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் நாளை 25ஆம் தேதி நடக்கிறது. காலை 6 மணிக்கு தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் நடக்கிறது.
திருவாரூர்: ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்கள் தேரோட்டத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தா கூறியுள்ளார். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் கண்டிப்பாக வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே என திருநாவுக்கரசரும், தேராரூம் நெடுவீதி திருவாரூர் என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் ஆலயம் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவில் சைவ சமயத்திற்கே பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பது ஆகும். பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாக விளங்கும் இக்கோவில் சனீஸ்வரனும், நளனும் வணங்கி சாபம் போக்கியதன் மூலம் சர்வதோஷ பரிகாரதலமாகவும் விளங்குகிறது.

ஆழித்தேரோட்டம்
இக்கோவில் ஆழித்தேர் ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்குகிறது. திருவாரூர் தேரோட்ட திருவிழாவினை திருநாவுக் கரசரும் திருஞான சம்பந்தரும் வந்து தங்கி தேரோட்ட ஏற்பாடுகளை பார்ப்பதாகவும் இத்தேரினை இந்திரன் முதலான தேவர்கள் வான்நின்று வணங்கி மகிழ்வதாக ஐதீகம்.

என்னென்ன சிறப்புகள்
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட தேர்
கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும், 3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவார். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

கம்பீர தேரோட்டம்
தேரோட்டத்தின் போது மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு சுமார் 450 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடிஅசைந்தாடியபடி நகர்ந்து செல்லும் காட்சியானது கண்கொள்ளா காட்சியாகும். 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் 1 கி.மீ. தூரமாகும்.

சிறப்பு பூஜைகள்
இத்தகைய சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை முன்னிட்டு கோவிலின் தேவாசிரிய மண்டபத்தில் இருந்து தியாகராஜர் கடந்த புறப்பட்டு அஜபா நடனத்துடன் நகர்வலமாக வந்து திருத்தேர் ஏறுகிறார். தியாகராஜர் ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக ராஜ வீதிகளில் நடைபெறுகிறது.

பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
தேரோட்டம் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் வருவார்கள் என்பதால் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதை யொட்டி 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்கள் தேரோட்டத்திற்கு வருவதை தவிர்க்கவும். மேலும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் கண்டிப்பாக வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளவும்.

முக கவசம் அவசியம்
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறும் முன் முகக்கவசம் அணிந்து வரவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா கூறியுள்ளார். வழிகாட்டு நெறிமுறைகள் அமுலில் உள்ளதால் அதிகமான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications