திருச்சானூர் பிரம்மோற்சவம் 2018: கஜ வாகனத்தில் எழுந்தருளி பத்மாவதி தாயாரை தரிசித்த பக்தர்கள்
திருச்சானூர் கோயில் பிரமோற்வசத்தின் 5ம் நாளன்று கஜ வாகனத்தில் பவனி வந்த பத்மாவதி தாயாரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி: திருச்சானூர் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று தங்க கஜ வாகனத்தில் பவனி வந்த பத்மாவதி தாயாரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு முன்பு திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிய பின்பு தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக பக்தர்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் திருச்சானூர் அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம் டிசம்பர் 4ம் தேதி செவ்வாய்க் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பக்தர்களுக்கு அருள்
தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 4வது நாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பத்மாவதி தாயார் பவனி
5ம் நாளான நேற்று காலை பத்மாவதி தாயார் நாச்சியார் அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பண்டிதர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். இதில் மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன. பெண்கள், ஆண்கள் பங்கேற்ற நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

அம்மனுக்கு காசுமாலை
முக்கிய வாகன சேவையான கஜ வாகனத்தில் இரவு தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்தார். இதையொட்டி, ஏழுமலையான் கோயில் இருந்து மூலவருக்கு சமர்ப்பிக்கப்படும் லட்சுமி காசுமாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருச்சானூருக்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, காசுமாலை ஊர்வலமாக பத்மாவதி தாயார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று இரவு கஜ வாகன வீதி உலாவின் போது காசுமாலை தாயாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

திருச்சானூர் பிரம்மோற்சவம்
இதை தொடர்ந்து 9ஆம் தேதி இன்று இரவு தங்கதேரோட்டமும், கருடவாகனத்தில் வீதி உலா உற்சவமும், 11ஆம் தேதி ரதஉற்சவமும் நடைபெற உள்ளது. தென் மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனை, தப்பாட்டம், கேரள சண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிககள் இதில் இடம்பெற்றன. டிசம்பர் 12ஆம் தேதி வரை பிரம்மோற்சவ உற்சவம் நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications