ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா - நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி விழாவை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சுமாா் 12 லட்சத்துக்கும் அதிகமானோா் தரிசனம் செய்துள்ளனர்.
திருச்சி: வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. உற்சவர் நம்பெருமாள், சின்ன பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். இன்று நம்பெருமாள் மோட்சம் நடைபெறுகிறது. 21 நாட்கள் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில் 12லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றைழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவானது கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை 21 நாள்கள் நடைபெற்றது.
கடந்த 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்ற பகல்பத்து விழா நடைபெற்றது. தினசரியும் நம்பெருமாள் அலங்காரமாக ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினசரியும் 50 ஆயிரம் பேர் வரை ஸ்ரீரங்கநாதரையும் நம்பெருமாளையும் தரிசனம் செய்துள்ளனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இராப்பத்து விழா தொடங்கிய 25 ஆம் தேதி நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் பங்கேற்றனா். நம்பெருமாள் ரத்னஅங்கி அணிந்து சேவை சாதித்தார். முத்தங்கி சேவையில் மூலவர் ஸ்ரீரங்கநாதர் சேவை சாதித்தார். முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
நம்பெருமாள் தீர்த்தவாரி
ராப்பத்து உற்சவத்தின் 10 நாளான ஞாயிறன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசலை கடந்து சந்திர புஷ்கரணியில் எழுந்தருளினார். அதன் பின்னர் அங்கு தீர்த்தவாரி கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீரை தெளித்துக் கொண்டு பரவசமடைந்தனர்.
முத்தங்கி சேவை நிறைவு
மூலவா் முத்தங்கி சேவை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றதால் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனா். இராப்பத்து விழாவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை வரை தினசரியும் சுமாா் 60 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரையிலான பக்தா்கள் தரிசித்துள்ளனா்.
வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று அதிகாலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு அடைந்துள்ளது. 21 நாட்கள் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில் 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.