மார்கழி மாதத்தில் கல்யாணம் உள்ளிட்ட சுப காரியங்கள் செய்வதில்லை ஏன் தெரியுமா
சென்னை: ஆடியில் விதை விதைத்து மார்கழியில் அறுவடை செய்வார்கள் எனவேதான் ஆடி மாதத்தையும், மார்கழி மாதத்தையும் சுப நிகழ்ச்சிகளுக்கு உரிய மாதமாக வைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களை இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக கருதியை திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்துவதை தவிர்த்து வந்தனர்.
மார்கழி மாதம் பீடை மாதம் என்கிற தவறான அபிப்பிராயமும் மக்களிடையே உள்ளது. அது இறைவனின் பீட மாதம். மாதங்களில் நான் மார்கழி என்று இறைவன் கூறியிருக்கிறார். மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளைத் தரக்கூடியது.
மார்கழி மாதத்தில் திருமணம் வேண்டா மென்று சொன்னதற்கு முக்கியமான காரணங்கள் உள்ளன. மழை, இருள் போன்ற அகன்று, அடுத்து வர இருக்கும் தை மாதத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கவேண்டும்.
எந்தப் பணியாக இருந்தாலும் அதைத் தொடங்குவதற்கு முன்னர் கடவுளை வணங்குவது நம்முடைய மரபு. அதுவும் வயிற்றுக்குச் சோறிடும் அறுவடைப் பணிகளுக்கு முன்னதாக தெய்வத்தைத் தொழாதிருக்கலாமா? அது மட்டுமில்லை, அறுவடை முடிந்தால்தான் கையில் பணம் கிடைக்கும். அப்போதுதான் திருமணம், கிரஹப்பிரவேசம் போன்றவற்றை நடத்தமுடியும்.
அந்தக் காலத்தில் கிராமத்து வாழ்க்கை. ஒரு வீட்டில் கல்யாணம் என்றால், மொத்த கிராமமும் அதில் பங்கெடுக்கும் எனவே இறைவனை வழிபட முடியாமல் போகுமே என்பதற்காகத்தான் மார்கழி, புரட்டாசி ஆடி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்தாமல் தவிர்த்து வந்தனர்.
மார்கழி மாதம் என்பது தேவர்களின் பிரம்ம முகூர்த்த மாதமும் ஆகும். மனிதர்களுடைய ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும்; தை முதல் ஆனி வரையிலான உத்தராயண ஆறு மாதங்கள், அவர்களுக்குப் பகல் பொழுது; ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சணாயண ஆறு மாதங்கள், அவர்களுக்கு இரவுப் பொழுது. இந்தக் கணக்குப்படி, தேவ பகல் தொடங்குவதற்கு முன்னதான மார்கழி, தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்தச் சுப வேளையில், தேவர்களும் முனிவர்களும்கூட, இறைவனை வழிபடுகிறார்கள்.
எனவேதான் மனிதர்களாகிய நாமும் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவதால், நாடி நரம்புகள் வலுவடைகின்றன. நீண்ட ஆயுளும் கிடைக்கும். தியானம், ஆன்மிகம், வழிபாடு என்று மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும் பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே தான் உலக வழக்கங்களுக்காக இல்லாமல், இறைவனை வழிபடவென்றே மார்கழி மாதத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்.
அறிவியல் ரீதியாக பார்த்தால் ஏனைய காலங்களில் மூலாதாரத்தை நோக்கி இருக்கும் ஈர்ப்பு சக்தி மார்கழியில், பூமியில் வடபாதியில் இருக்கும் மக்களான நமக்கு குறைவாகவே இருக்கும். இந்த மாதத்தில் விதை விதைத்தால் அது சரியாக முளைக்காது. உயிர்சக்தி மந்தமாயிருக்கும். இக்கால கட்டத்தில் நம் உடம்பின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும், ஸ்திரமாக்கி சேமித்துக் கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவேதான் இச்சமயம் திருமணங்கள் நடைபெறுவதில்லை. அதைத் தவிர்க்கும் நிலை தொடர்ந்து வருகிறது. கருவுறுவதற்கு ஏற்ற சமயம் இதுவல்ல. இல்லறத்தில் இருப்போர் இச்சமயம் புலனடக்கத்தை மேற்கொண்டு வழிபாட்டில் கவனம் செலுத்துவதை மரபாகக் கொண்டுள்ளனர். சூரியசக்தி கீழ்நோக்கி செயல்படுவதால் மனநோயாளிகள் தங்கள் மனநிலையில் சமன்பாடு கொண்டு வருவதற்கு உகந்த நேரமும் இதுதான் என்றும் பெரியோர்களும் ஜோதிடர்களும் கூறியுள்ளனர்.