புரட்டாசி பவுர்ணமி..சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி
விருதுநகர்: சதுரகிரி மலைக்கோயிலுக்கு புரட்டாசி பவுர்ணமி விழாவுக்காக பக்தர்கள் 3 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மலைப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டதால் இன்று முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மழை காலங்களில் ஓடைகளில் வெள்ளம் செல்வதால் பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட மாட்டார்கள்.
மகாளய அமாவாசை மற்றும் நவராத்திரி விழாவிற்காக கடந்த 5ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வனப்பகுதியில் தீ பரவியதால் பக்தர்கள் நேற்று செல்ல வனத்துறை தடை விதித்து இருந்தது.
மலை பகுதியில் தீ
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தாணிப்பாறைக்கு மேற்கே வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட பீட் நம்பர் 4 வல்லாளம்பாறை பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இந்த தீயானது மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
வனத்துறையினர் போராட்டம்
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்பகுதியில் அதிகமாக காற்று வீசுவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இரண்டு நாட்களாக தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
மலையேற தடை
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காட்டு தீ காரணமாக மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
3 நாட்கள் மட்டுமே அனுமதி
நேற்றிரவு தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதால் இன்று முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யயலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். புரட்டாசி பவுர்ணமி நாளில் சாமி தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன கட்டுப்பாடுகள்
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.