வைகாசி விசாகம்.. முருகன் ஆலயங்களில் கோலாகலம்..தானம் செய்தால் என்னென்ன நன்மைகள்
வைகாசி விசாகம் விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஏராளமானோர் பால்குடம் சுமந்து வந்து வழிபட்டனர். வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
Recommended Video
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் ஆகும். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. நாளை வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,பமுதிர்சோலை,சுவாமி மலை, திருத்தணி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் விசாக விழா சிறப்பாக நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனியில் வைகாசி விசாகத்திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. நேற்றைய தினம் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வைகாசி விசாக நாளான இன்று தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சென்னை வடபழனியில் உள்ள முருகன் ஆலயம், கந்த கோட்டம் முருகன் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கந்தனாகவும், கார்த்திக்கேயனாகவும், சுப்ரமணியராகவும் முருகன் குன்று இருக்கும் இடமெங்கும் குமரனாக போற்றப்படுகிறார். முருகன் என்றால் தமிழ். இவர் தமிழர்களின் கடவுள் மட்டுமல்ல இரண்டாம் தமிழ் சங்கத்தின் தலைவராகவும் போற்றப்படுகிறார். அகத்தியருக்கே தமிழ் கற்றுக்கொடுத்தவராம் இந்த அப்பனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சுப்பன். முருகனும் தமிழும் ஒன்றுதான் என்பதை இவரை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
வேலும் மயிலுமாக காட்சி தரும் முருகன் வெற்றியின் குறியீடு. ஏழைகளின் தலைவன், மலைவாழ் மக்களின் வேந்தன். தமிழர்களின் முப்பாட்டனாகவும் கொண்டாடப்படுகிறார். அவரை குறிப்பிட்ட மதத்தின் கடவுளாகவும், குறிப்பிட்ட ஜாதிக்குள்ளும் அடைத்து வழிபட வேண்டிய அவசியமில்லை. தமிழர்கள் அனைவருமே போற்றி வணங்கலாம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை... சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்று முருகனின் அருளைச்சொல்லும் பழமொழியே இருக்கிறது. அறுபடை வீடுகளில் மட்டுமல்ல குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்தான். வைகாசி விசாசம் நாளில் முருகனை விரதம் இருந்து வணங்குவோம் வளங்களைப் பெறுவோம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications