இன்று வாஸ்து நாள்: வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க இந்த விசயங்களை மறக்காமல் செய்யுங்க
இன்று வாஸ்து நாள். வீடு கட்டிடம் கட்ட வாஸ்துபகவானை வணங்கி வீடு கட்டும் பணியை தொடங்க தடைகள் இன்றி கட்டிடம் கட்டி குடியேறலாம்.
மதுரை: உறக்கத்தில் இருந்த வாஸ்துபகவான் இன்று விழிக்கும் நாள். இன்று வைகாசி மாதம் 21ஆம் தேதி 04.06.2021 வெள்ளிக்கிழமை காலை 09.58 முதல் 10.34 வரை வாஸ்து விழிப்பு நேரம் என்பதால், அந்த நேரத்தில் வாஸ்து பகவானை வழிபட தடைபட்டிருந்த வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்படையும். வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க நாம் சில விசயங்களை செய்தால் தோஷங்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வீட்டிற்குள் சென்றாலே சிலருக்கு நிம்மதி போய்விடும். சில வீடுகளில் சண்டை சச்சரவாக இருக்கும். சில வீடுகளில் நோயாளிகள் அதிகம் இருப்பார்கள். இதற்கு காரணம் வாஸ்து தோஷம்தான். வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம். இந்த வாஸ்து சாஸ்திரத்தின் அதிபதியே ஸ்ரீ வாஸ்து புருஷர் ஆவார்.
வாஸ்து என்றால், பொருள்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடம் என்று பொருள். வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால் வாஸ்து புருஷனின் ஆசிகள் பெற்று வளமோடு வாழலாம். மனிதன் ஏற்படுத்திக்கொண்ட வசதி வாய்ப்புகளை இயற்கைச் சக்திகளோடு ஒருங்கிணைக்கும் ஓர் அறிவியல்தான் வாஸ்து சாஸ்திரம்.
வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம்.
ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வாஸ்து நாட்கள் வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். இந்த நேரத்தை வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதிற்கு உகந்த நேரம் ஆகும்.
வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். அவ்வாறு செய்யும் நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது. வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை.
கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.
அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர்.
பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.
பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.
இன்றைய தினம் சொந்த வீட்டில் வசிப்பவர்களும், வாடகை வீட்டில் வசிப்பவர்களும் வீட்டை சுத்தம் செய்து, நிலைப்படிகளுக்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடலாம். சொந்த வீடு சுபிட்சமாக இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விரைவில் சொந்த வீடு கட்டுவார்கள். ரியல் எஸ்டேட் தொழில் சிறந்து விளங்கவும் தடைப்பட்ட கட்டிடப் பணிகள் விரைவில் முடியவும் வீடு மனை போன்றவைகளில் உள்ள வாஸ்து தோஷங்கள் அகலவும் வாஸ்து பகவானை வணங்கலாம்.
சிறிய தொழில், பெரிய தொழில் செய்வோர்க்கும், வியாபாரம் செய்வோர்க்கும் மற்றும் பலவகை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும், குடும்ப பெண்களுக்கும் சொந்தமாக ஒரு வீடுகட்ட வேண்டும் என்ற கனவு எல்லோருடைய மனதிலும் இருப்பது உண்டு. இதற்காக அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப வீட்டு மனைகளை வாங்கிப்போடுவதும், தான் குடியிருக்கும் வாடகை வீட்டை விலைக்கு வந்தால் வாங்கி போடலாம் என்பது சிலர் நினைப்பதும் உண்டு. அப்படி வாங்கிப்போட்ட மனைகளில் எப்போது பூமி பூஜை போட்டு தொடங்க வேண்டும் என்பது பற்றி சிலருக்கு கேள்வியாக இருக்கும்.
வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழி செய்யும்.
இன்று 04. 06.2021 வெள்ளிக்கிழமை வாஸ்து நாளாகும். வாஸ்து நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வாஸ்து சாந்தி ஹோமமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
வாஸ்து தோஷங்கள் நீங்க பரிகாரம்.
வீட்டின் வடகிழக்கில் துளசி, நந்தியாவட்டை போன்ற பூச்செடிகள் வளர்க்கலாம். பூஜை அறையில் தினமும் காலையில் மாலையில் கிழக்கு நோக்கி தீபமேற்றி, 'ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ' என்ற மந்திரத்தை 27 முறை கூறிவழிபட வேண்டும். ஓம் என்னும் பிரணவ மந்திரம், கந்தசஷ்டிக் கவசம், சிவபுராணம், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், காயத்ரி மந்திரம் போன்ற ஸ்லோகங்கள் ஒலிப்பது நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமை மாலையில் வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு வணங்க தோஷங்கள் நீங்கும்.
ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்கள் பிரசாதமாக பெற்று வீட்டில் வைத்து வழிபட வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
வாஸ்து நாட்களிலும் வளர்பிறை பஞ்சமி தினங்களிலும் அமாவாசை புதன்கிழமை சேர்ந்து வரும் நாளிலும் தன்வந்திரி பீடத்தில் உள்ள ஆரோக்கிய லஷ்மி சமதே தன்வந்திரி பெருமாள் தரிசித்து பின்பு வாஸ்து பகவானை தரிசித்து அன்று நடைபெறும் வாஸ்து ஹோமத்தில் பங்கேற்று செல்பவர்களுக்கு விரைவில் வீடு- மனை வாங்கும் யோகம் கிடைப்பது உறுதி என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மேலும் வீடு- மனை தொடர்பான சிக்கல்களில் இருப்பவர்களும், வாங்க வேண்டுமே என்கிற ஆவலில் இருப்பவர்களும் வழிபடுவது கூடுதல் பலனைத் தரும் என்பது நம்பிக்கை. தொடர்புக்கு 04172 - 230033, செல் - 9443330203.