ஹைபர் டென்சன்...பிபி யாருக்கு வரும்... மருத்துவ ஜோதிடம் சொல்லும் உண்மை
டென்சன்..டென்சன் என பலரும் இன்றைக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். நாம் டென்சனை விரும்பாவிட்டாலும் டென்சன் நம்மை விரும்புகிறது.
சென்னை: டென்சன்...டென்சன்... ஐ டோன்ட் லைக் டென்சன்... பட் டென்சன் லைக் மீ என்று பலரும் வசனம் பேசும் அளவிற்கு இன்றைக்கு ஹைபர் டென்சனில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். உயர் ரத்த அழுத்தம் என்பது சைலண்ட் கில்லர்தான். மெல்லக்கொல்லும் இந்த நோய் யாரை பாதிக்கும் மருத்துவ ஜோதிடம் சொல்வதென்ன என்று பார்க்கலாம்.
இந்திய இளைஞர்களில், சராசரியாக, 3 பேரில் ஒருவருக்கு ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
மாறிவரும் வாழ்க்கை சூழலே இதற்கு முக்கியமான காரணம் என்றும் வேலையில் ஏற்படும் மன அழுத்தம் உயர் ரத்த நோய் ஏற்பட காரணமாக உள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே மே 17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த நோய் தினமாக கடைபிடிக்கின்றனர்.
இதயக்கோளாறு யாருக்கு வரும்
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு உயர்ரத்த அழுத்தம் எப்போது வரும் என்று பார்க்கலாம். ஒருவரின் ஜாதகக் கட்டத்தில் மனோகாரகரான சந்திரன் பலவீனமடைந்திருந்தால் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும். சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
உயர் ரத்த அழுத்தம் யாருக்கு வரும்
ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்+சனி அல்லது செவ்வாய்+ராகு சேர்க்கை காணப்படும். இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் குரு சேர்க்கை பார்வை இருந்தால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீரிழிவு நோய்
உயர் ரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பக்கவாதம், அதனால் பேச்சுத் தடை, மாரடைப்பு, இதயப் பலவீனம், சிறுநீரக நோய், ஏன் மரணம் கூட ஏற்படலாம். உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
பிரட், பீட்சா, சீஸ் மற்றும் வெண்ணெய்யில் அதிக சோடியம் இருப்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது. அப்பளம் ஊறுகாய் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அல்லது இனிப்பு சுவையூட்டிகள் நிறைந்த உணவை பொதுவாகவே அனைவரும் தவிர்த்துவிடுவது சிறந்தது. உயர் ரத்த அழுத்தமுள்ள பெண்கள் அதை கட்டுக்குள் வைக்க, சர்க்கரை சேர்த்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்கலாம். மயோன்னிஸ், கெட்ச்-அப், சில்லி சாஸ் போன்றவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இவற்றில் அதிகளவு சோடியம் இருப்பதால் அவை இதயத்தை பலவீனப்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு அதிகம் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இது இதய நோய்களுக்கு கட்டாயம் வழிவகுக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்கும் உணவுகள்
என்ன சாப்பிடலாம் கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். வெள்ளரி, நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை, கொத்தமல்லி, அன்னாசி, பேரீச்சை, ஆரஞ்சு, முளைகட்டிய தானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல் சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சாப்பிட உயர் ரத்த அழுத்தம் குறையும்.
நோய்களை நீக்கும் முருகப்பெருமான்
செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான். எல்லா முருகன் தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களே. அறுபடை வீடுகளுக்கு சென்று முருகப்பெருமானை வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்னைகள் விலகும். தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், முருகன் துதி பாடல்களை பாடி முருகனையும், செவ்வாய் எனப்படும் அங்காரகனையும் வணங்கலாம். பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில், செவ்வாய் பகவானுக்கு முக்கிய பரிகாரத் தலமாக விளங்குகிறது இதய நோய் பிரச்சினை உள்ளவர்கள் நேரில் சென்று வணங்கி வரலாம்.