கண் முன்பு துடித்த குழந்தை.. எந்த அப்பாவும் பார்க்க முடியாத கோலம்.. தன் மகள் பற்றி ஜித்தன் ரமேஷ் உருக்கம்
சென்னை: தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மூன்றாவது மகனாக சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகர் ஜித்தன் ரமேஷ். தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்துடன் வந்தாலும், தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் நடித்தவர். அவர் நடித்த ஜித்தன் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று, அவருக்கு ரசிகர்களிடையே தனி கவனம் கிடைக்கச் செய்தது.
அந்த வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து முன்னணி நடிகராக உயர்வார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவருக்கு சரியான கதைகள் அமையவில்லை. சில படங்களில் நடித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் ஒரு கட்டத்தில் அவர் பின்னுக்கு தள்ளப்பட்டார். அதற்குப் பிறகு மக்கள் மத்தியில் மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது குடும்ப வாழ்க்கை, சினிமாவில் சந்தித்த ஏமாற்றங்கள், மன வேதனைகள் ஆகியவற்றை ஓபன் ஆக பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

பிக்பாஸ் தமிழ்
பின்னர் ஜப்பான் மற்றும் ரூட் நம்பர் 17 போன்ற படங்களில் நடித்தாலும், வாழ்க்கையில் சந்தித்த சோதனைகள் குறித்து சமீபத்திய பேட்டியில் ஜித்தன் ரமேஷ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.
பலர் வந்து "நீங்கள் அருமையான நடிகர்" என்று புகழ்ந்து கதைகள் சொல்லி, தன்னை நம்ப வைத்து படங்கள் தொடங்க வைத்துவிட்டு பின்னால் விலகி விட்டார்கள். "என் முதுகில் குத்தியவர்கள் நிறைய பேர்" என்று அவர் நேரடியாக சொல்லும் போது, சினிமாவில் அவர் சந்தித்த மன வேதனை எவ்வளவு ஆழமானது என்பது தெரிகிறது. ஒரு சிலருக்கு என்னதான் திறமையும் உழைப்பும் இருந்தாலும் அதற்கு சரியான அங்கீகாரமும் வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் ஜித்தன் ரமேஷும்.
முதுகில் குத்தியவர்கள்
ஆனால் இந்த ஏமாற்றங்களைக் காட்டிலும் அவரை இன்னும் உடைத்த ஒரு சம்பவம் அவரது குடும்பத்தில் நடந்தது. அதாவது "என் மகள் தான் என் உயிர்" என்று சொல்லும் அளவுக்கு மகளிடம் அளவில்லா பாசம் வைத்திருக்கும் ஜித்தன் ரமேஷ், மகள் பிறக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாராம்.
அப்படியே ஆசைப்பட்டு பிறந்த அவரது மகளுக்கு இரண்டு வயது இருக்கும் போது நடந்த விபத்தை நினைத்தாலே இன்று வரை அவரால் தாங்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். ஒரு நாள் விளையாடிக் கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த குழந்தை தலையிலும் முகத்திலும் மோசமாக அடிபட்டு ரத்தமாக கிடந்த தருணம், ஒரு தந்தையாக அவரை முற்றிலும் உடைத்துவிட்டது.
மறந்து போக வேண்டும்
அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் ஓடிக்கொண்டிருந்தேன். "என் வாழ்க்கையில் நான் ஏறவே கூடாது என்று நினைத்த ஆம்புலன்ஸில் அந்த இரவு மட்டும் மூன்று நான்கு முறை ஏறினேன்" என்று அவர் கூறிய போது, அது ஒரு நடிகரின் பேச்சாக இல்லாமல், ஒரு தந்தையின் உடைந்த மனதின் குரலாகவே இருந்தது.
"அந்த நாளை நினைத்தாலே இன்னும் எனக்கு தாங்க முடியவில்லை. என் வாழ்க்கையில் மறந்து போக வேண்டும் என்று நினைக்கும் ஒரே சம்பவம் அதுதான்" என்று ஜித்தன் ரமேஷ் கூறியுள்ளார். சினிமாவில் ஏமாற்றங்கள் இருந்தாலும், குடும்பம் தான் தனது பலம் என்றும், மகள் தான் தனது உலகம் என்றும் அவர் கூறும் போது, திரையில் பார்த்த நடிகருக்கு பின்னால் இருக்கும் ஒரு உண்மையான மனிதரை ரசிகர்கள் காண்கிறார்கள்.












Click it and Unblock the Notifications