ஏவுகணை மட்டுமா ஆயுதம்?.. அடுத்த நாட்டு கரன்சியும் தான்!
(''டாலர்களை சந்தையில் கொட்டவா?!!'' கட்டுரையின் இறுதி பாகம்)
சீனாவின் இந்த 3.8 டிரில்லியன் டாலர் பிரச்சனைக்கு குறுகிய காலத் தீர்வு என்று ஏதும் இல்லை என்பது தான் இதில் வேடிக்கை. இந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர சீனா பல நீண்ட கால பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டாக வேண்டும்.
வழக்கமாக தனது வர்த்தக பார்ட்னர்களின் இறக்குமதி குறைவாகவும், ஏற்றுமதி அதிகமாகவும் இருந்தால் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம் 'beggar-thy-neighbour' பாலிஸி ஆகும்.
அதாவது, எந்த நாடு தன்னிடம் குறைவான பொருட்களை வாங்கிக் கொண்டு, அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்கிறதோ அந்த நாட்டில் தனது டாலரின் மதிப்பை சரிய வைக்க எல்லா வேலைகளையும் அமெரிக்கா செய்யும். இதன்மூலம் அந்த நாட்டின் கரன்சி மதிப்பை கூட்டிவிட்டு, ஏற்றுமதியாளர்களின் லாபத்தை குறைக்கும். இதன்மூலம் அந்த நாட்டின் ஏற்றுமதியையே சரியச் செய்யும்.
இந்த பாலிஸியை சீனாவில் அமலாக்க அமெரிக்கா எல்லா முயற்சிகளும் செய்து பார்த்தும் இதுவரை பலனளிக்கவில்லை. காரணம், சீனா தனது நாட்டின் கரன்சியான யுவானின் மதிப்பு அதிகரித்துவிடாமல் இருக்க எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருவது தான்.
அமெரிக்கா அளவுக்கு சீனாவிலும் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்தால் மட்டுமே, யுவானின் மதிப்பு உயர வாய்ப்புள்ளது. அது நடக்க இன்னும் குறைந்தது 30, 40 ஆண்டுகளாவது ஆகும்.
அதுவரை தனது டாலர்களை வைத்துக் கொண்டு தன்னையே சீனா மிரட்டுவதை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்க முடியாதல்லவா. இதனால் தான் சீனாவை எப்படியாவது வழிக்குக் கொண்டு வருவதற்காக, அந்த நாட்டிடம் உள்ள டாலர்களை சர்வதேச சந்தைக்குத் திருப்பிவிட அமெரிக்கா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த டாலர்கள் சர்வதே சந்தைகளுக்கு வெள்ளம் போலப் பாய்ந்தால், உலகளவில் டாலரின் மதிப்பு குறையும் அபாயம் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் சீனாவின் பயமுறுத்தல்களில் இருந்து தப்பவும், சீனாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் அது அமெரிக்காவுக்கு நிச்சயம் உதவும்.
இதனால் தான் உன்னிடம் உள்ள டாலர்களை சர்வதேச சந்தையில் கொட்டிப் பாரேன் என்று சீனாவை அவ்வப்போது அமெரிக்கா சீண்டுகிறது.
அதே நேரத்தில் தன்னிடம் உள்ள டாலர்களை ஒரே நேரத்தில் சீனா வெளியே தள்ளாது என்பதும் அமெரிக்காவுக்கு மிக நன்றாகவே தெரியும். டாலர்களை மொத்தமாக இழந்துவிட்டால், நஷ்டம் சீனாவுக்கும் தான் என்பதால், அந்த வேலையை அந்த நாடு நிச்சயமாகச் செய்யாது.
ஆனால், சீனாவின் பொருளாதார-பிராந்திய பாதுப்புக்கு அமெரிக்காவால் பெரிய அளவில் ஆபத்து வந்தால், தனது டாலர் பிரம்மாஸ்திரத்தை சீனா நிச்சயம் பயன்படுத்தவும் தயங்காது என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள்.
உலக நாடுகளின் பொருளாதாரம் ஒரு நாட்டோடு இன்னொன்று பின்னிப் பிணைந்துவிட்ட இந்த வர்த்தக உலகில் ஏவுகணையும், அணுகுண்டும் மட்டுமா ஆயுதம்?.. அடுத்த நாட்டு கரன்சியும் தான்!