“தமிழகத்தின் இருண்ட ஆட்சி போதாதா? இந்தியாவிற்கும் தேவையா?” ஸ்டாலின்
தென்காசி: தென்காசி நாடாளுமன்ற தொகுதி பிரச்சார மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுகஆதரவு பெற்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் வேட்பாளர் டாக்டர் . கிருஷ்ணசாமியை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு எடுத்துக் காட்டாக அமையும் என்றார் ஸ்டாலின் .
காரணம் தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் ஆட்சி, மன்னிக்கவும்!! ஆட்சியல்ல காட்சி, காணொளி காட்சியாக நடைபெற்று வருகிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.
தேர்தல் வந்தால்தான் மக்கள் நினைவு வரும்:
தேர்தல் வந்தால் மட்டுமே ஜெயலலிதாவுக்கு மக்களின் நினைவு வரும். ஆனால் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள், முன்னணியினர், செயல்வீரர்கள், தொண்டர்கள் யாரும் தேர்தல் பற்றி கவலை படுவதில்லை. நாட்டை பற்றி, மக்களை பற்றி கவலைப் படும் ஒரே தலைவர் கலைஞர் அவர்கள்.
என்ன செய்தது ஜெயலலிதா அரசு:
சில தலைவர்கள் அப்படியல்ல. குறிப்பாக ஜெயலலிதா கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது வந்தார். வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன், மணலை கயிறாகத் திரிப்பேன் எனப் பல உறுதிமொழிகளை தந்தார். இப்போது நான் கேட்கிறேன், 3 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினேன் என சொல்லும் ஆற்றல் ஜெயலலிதாவுக்கு உண்டா ? என்றால் கிடையாது.
மூடி மறைத்து பிரச்சாரம்:
இதை மூடி மறைக்க இப்போது போயஸ் தோட்டத்தில் இருந்து காரில் விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் ஏறி, பிறகு ஹெலிகாப்டர் பிடித்து ஆங்காங்கே ஹெலிபேடுகளை அமைத்து இறங்கி, அங்கிருந்து மைதானத்துக்கு வருகிறார். அங்கு எதை எதையோ சொல்லி, எதையெதையோ கொடுத்து கூட்டி வரப்பட்டவர்கள் முன்பாக, எழுதிக் கொடுக்கப்பட்ட காகிதங்களில் இருப்பதை படிக்கிறார். மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்று கருதிக் கொண்டு பொய்யான, தவறான பிரச்சாரம் செய்கிறார்.
பட்டியல் மட்டும் போதுமா? :மத்திய அமைச்சரவையில் திமுக இருந்தபோது எதையும் செய்யவில்லை என சொல்கிறார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் தெளிவாக அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். அதில் 100 உறுதிமொழிகளை குறிப்பிட்டு உள்ளார். எதையெதை நிறைவேற்றி உள்ளோம், எதையெல்லாம் நிறைவேற்றப் போராடி வருகிறோம், எவற்றையெல்லாம் நிறைவேற்றுவோம் என பட்டியல் இட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் திமுக இருந்தபோது எதையும் செய்யவில்லை என சொல்கிறார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் தெளிவாக அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். அதில் 100 உறுதிமொழிகளை குறிப்பிட்டு உள்ளார். எதையெதை நிறைவேற்றி உள்ளோம், எதையெல்லாம் நிறைவேற்றப் போராடி வருகிறோம், எவற்றையெல்லாம் நிறைவேற்றுவோம் என பட்டியல் இட்டுள்ளார்.
வாக்குறுதிகள்:
தமிழ், செம்மொழி என்ற பிரகடனம், சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய அரசு நிறுவனம்.2427 கோடி ரூபாய்ச் செலவில் சேதுசமுத்திரத் திட்டம்
கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய் செல்வில் 4 ஆயிரத்து 676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில்
விரிவாக்கப் பணிகள்
3 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு, மிகப் பிரம்மாண்டமான போக்குவரத்து மேம்பாலங்கள்,
துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள்,நீர்வழிப் போக்குவரத்து வசதிகள், சென்னைக்கருகில் ஓரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம்.
இட ஒதுக்கீடு:
1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச தர அளவுக்கு உயர்த்தப்பட்டு புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசி இணைப்புகள், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு.
ஆட்சியை கவிழ்த்த அம்மையார்:
அம்மையார் மத்திய அமைச்சரவையில் பங்கேற்றபோது அவரது சாதனைகள் என்ன என்பதை அவர் சொல்லத் தயாரா ? வாஜ்பாய் தலைமையிலான பிஜேபி கூட்டணியில் இருந்தபோது 13 மாதங்களில் ஆட்சியை கவிழ்த்த சாதனையை தவிர வேறு சாதனை இவர் செய்துள்ளாரா ?
தமிழக கோரிக்கைகளையே நிறைவேற்றவில்லை:
"தமிழக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட மத்தியில் அ.தி.மு.க. இடம்பெறும் ஆட்சி வேண்டும்" முழங்கியிருக்கிறார் ஜெயலலிதா.
இவர் கடந்த காலங்களில் மத்திய அமைச்சரவையில் பங்கேற்றபோது என்னமாதிரி கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்? என்னென்ன திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என அவரால் பட்டியலிடமுடியுமா?
பா.ஜ.கவின் வாக்குறுதிகளை காப்பி:
ஆனால் மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்த போது என்ன கோரிக்கைகள் வைத்தார் என்பதை தி.மு.க. வால் பட்டியலிடமுடியும்.வாஜ்பாய் அரசில் நிதியமைச்சராக இருந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா "சுதேசி சீர்திருத்த வாதியின் வாக்குமூலம்" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஜெயலலிதா அளித்த கோரிக்கைகள் பற்றி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
சிபாரிசுகளின் தலைவி:
தன்மீதுள்ள வருமானவரி வழக்குகளிலிருந்து தன்ன காப்பாற்றிக்கொள்ள இந்திய நிதியமைச்சரையே தன் வீட்டிற்கு அழைத்து கொடுத்ததுதான் தமிழக மக்களின் நலனுக்காக வைக்கப்பட்ட கோரிக்கையா? இதை தன் கைப்படவே எழுதிக்கொடுத்தார். இப்படி "சிபாரிசுகளின் தலைவி" யாக அ.தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்றபோது ஜெயலலிதா இருந்தார் என்பதுதான் உண்மை.
அப்பன் வீட்டு பணமா? :
ஒன்று தன்னை காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார் மக்கள் நலனில் வைக்கப்பட்ட கோரிக்கையா? ஒருமுறை அரசை கவிழ்த்தால் மறு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு 3500 கோடி ரூபாய் செலவாகிறது. இதென்ன ஜெயலலிதா அப்பன் வீட்டு பணத்தில் இருந்து செலவழிக்கப் படுகிறதா?
தி.மு.க.வின் சாதனைகள்:
1996-ல் மம்சாபுரம் பேரூராட்சியில் செண்பகத்தோப்பில் இருந்து மம்சாபுரத்திற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் வழங்கப்பட்டது.2006ல் மத்திய அரசு திட்டத்தால் கழக ஆட்சியில் சுத்திகரிக்கப்பட்ட 8 கோடி ரூபாயில் சிறப்பு பேரூராட்சி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட சிறப்பு மினரல் வாட்டர் 40000 லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் குடிநீர் பஞ்சத்தை இப்போதும் போக்குகிறது. இல்லையென்றால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும்.
நெடுஞ்சாலைத்துறை:
திருவில்லிபுத்தூர் நகாராட்சி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ரூ 30 கோடியில் நிறைவேற்றப்பட்டது.ரூபாய் 5 கோடி மதிப்பில் திருவில்லிபுத்தூர் மாதாங்கோவில் தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டியது.
கைத்தறி துறை நலன்கள்:
கைத்தறி நெசவாளர்களுக்கு தரமான இலவச பெடல் தறிகள் வழங்கியது. ரூ.700 கோடி மதிப்பீட்டில் அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள் முழுவதும் தாமிரபரணி குடிநீர் திட்டம் செயல்படுத்தியது.திரு.வி.க. உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது.
பேரூராட்சி அலுவலகங்கள்:
ஐந்து பேரூராட்சிகள் தலா 50 இலட்சம் வீதம் பேரூராட்சிகளுக்கு அலுவலகம் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டியது.1989ல் தலைவர் கலைஞர் ஆட்சியில் 13 கோடியில் தாமிர பரணி குடிநீர் திட்டம் தலைவர் அவர்கள் நேரில் வந்து அடிக்கல் நாட்டு விழா நடத்தி அது இன்று பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.
2ஜியும், சொத்துகுவிப்பு வழக்கும் ஒன்றுதான்:
2ஜி ஊழல் என்று ஜெயலலிதா பேசுகிறார். நாங்கள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிப் பேசுகிறோம். உங்களால் பதிலளிக்க முடியுமா? 2 ஜி இரண்டு ஆண்டுகளாக வாய்தா வாங்காமல் நடத்துகிறோம்.
வாய்தா மேல் வாய்தா:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 18 ஆண்டுடாக வைத்த வாய்தா வாங்குவது ஏன்?நீதிபதியை மாற்ற கூடாது என்று கோரினார். வாய்தா வாங்குவதற்கு நீதிபதி கண்டித்திருக்கிறார். அரசு வழக்கறிஞருக்கு 65000 ரூபாய் அபராதம் .எந்த தைரியத்தில் அரசு வழக்கறிஞர் வாய்தா வாங்குகிறார்.அபராதம் கட்ட போவது யார்?
ஊழல் வழக்கு:
ஊழல் வழக்கை நடத்த துணிவில்லாமல் வாய்தா வாங்கும் ஜெ க்கு ஊழலை பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கிறது? சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை திமுக ஆதரித்ததாக ஜெயலலிதா பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறார்.
பொய்யான குற்றச்சாட்டு:
ஆனால் நாங்கள் சில்லறை வணிகத்தில் மத்திய அரசை ஆதரித்தோமே தவிர அந்நிய முதலீட்டை ஆதரிக்கவில்லை. அந்தந்த மாநிலங்களுக்கே அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
குற்ற விகிதாச்சாரம்:
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குற்ற நிகழ்வு விகிதாச்சாரம் குறைவு என்று கவர்னர் உரைக்கு பதிலளித்து பேசியபோதும், சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்தும் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.
கிரைம் ரெக்கார்ட் அதிகம்:
தமிழக அரசின் க்ரைம் ரிக்கார்ட் பீரோ வெளியிட்டுள்ள புத்தகத்தில் தென் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகமான குற்றங்கள் நடந்த மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்திய அளவில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.
இருண்ட ஆட்சியில் தமிழகம்:
தமிழகம் இந்த இருண்ட ஆட்சியில் மூழ்கி கிடப்பது போல இந்திய திருநாட்டையும் மூழ்கடிக்க ஜெயலலிதா எண்ணுகிறார் அந்த நினைவை பொய்யாக்க வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கழக ஆதரவு பெற்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் வேட்பாளர் டாக்டர். திரு. கிருஷ்ணசாமிக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் உரையாற்றினார்.