Fact Check : ஆளுநர் மரபை மீறியிருக்கிறார்! தமிழனா இதை ஆட்சேபிக்கிறேன்! நயினார் நாகேந்திரன் சொன்னாரா?
சென்னை : "தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஆட்சேபத்திற்குரியது. இன்றைய ஆளுநர் அவையின் மரபுகளை மீறி இருக்கிறார். ஒரு தமிழனாக இதை ஆட்சேபிக்கிறேன்" என பாஜக எம்எல்ஏ நைனார் நாகேந்திரன் பேசியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. உண்மையில் நயினார் அப்படி பேசினாரா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கம் விழா தொடர்பான நிகழ்ச்சியில் பேசி ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என்பது அழைப்பது சரியாக இருக்கும் என கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையான கண்டனங்களை முன்வைத்தன. ஏற்கனவே ஆளுநரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றது.

பரபரப்புகள்
இதற்கிடையே 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன் தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே ஆளுநரின் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

திடீர் குழப்பம்
தொடர்ந்து முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆளுநர் வெளியேறியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், சபை மாண்பை ஆளுநர் புறக்கணித்ததாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நயினார் நாகேந்திரன்
ஆளுநருக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.வே பேசிவிட்டாரா என பலரும் அதனை ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். பிரபல இதழ் ஒன்றின் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில்,"ஆளுநரின் செயல் ஆட்சேபத்திற்குரியது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களால் கீழ்த்தரமாக குற்றம் சாட்டப்பட்டபோது கூட அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி ஜனநாயக மரபுகளை மீறியதில்லை. ஆனால், இன்றைய ஆளுநர் அவையின் மரபுகளை மீறியிருக்கிறார். ஒரு தமிழனாக இதை ஆட்சேபிக்கிறேன்" என நயினார் நாகேந்திரனின் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளது.

உண்மை என்ன?
தொடர்ந்து இதனை பலரும் பரப்பி வந்த நிலையில் சமூக வலைதளங்களை இரு தரப்பாக மோதிக் கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் புகைப்படத்தில் இடம் பெற்று இருந்த இதழின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் சமூக வலைதளங்களில் இது போன்ற எந்த பதிவும் இடம் பெறவில்லை. இதற்கிடையே அந்த நிறுவனத்தின் சார்பில் தாங்கள் அப்படி ஒரு நியூஸ் கார்டை வெளியிடவில்லை எனவும் நயினார் நாகேந்திரன் அப்படி சொல்லவில்லை. யாரோ ஒரு விஷமி இந்த புகைப்படத்தை போலியாக தயாரித்து சமூக வலைதளங்களில் பரவி விட்டிருக்கிறார்கள் எனவும், இது போலியானது எனக் கூறியிருக்கிறார்கள்.

போலியானது
இது மட்டும் இன்றி பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகியும் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவருமான சிடிஆர் நிர்மல் குமார் ஆளுநர் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாக வெளியாகி உள்ள நியூஸ் கார்டு போலியானது என தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் போலியானது என தெரிய வந்திருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
”தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஆட்சேபத்திற்குரியது. இன்றைய ஆளுநர் அவையின் மரபுகளை மீறி இருக்கிறார். ஒரு தமிழனாக இதை ஆட்சேபிக்கிறேன்” என பாஜக எம்எல்ஏ நைனார் நாகேந்திரன் கருத்து
முடிவு
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் போலியானது. பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவருமான சிடிஆர் நிர்மல் குமார் நயினார் நாகேந்திரன் பேசியதாக வெளியாகி உள்ள நியூஸ் கார












Click it and Unblock the Notifications