பல கோடி.. அர்ஜெண்டினாவிடம் வெற்றி! சவூதி கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசா? FACT CHECK
தோஹா: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சுற்று போட்டியில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்திய சவூதி அரேபியா அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக சவூதி அரேபிய அரசு வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் குரூப் சி-யில் இடம்பெற்று இந்த உலகின் தலைசிறந்த கால்பந்து அணியான அர்ஜெண்டினா மற்றும் சவூதி அரேபியா ஆகிய அணிகள் மோதின.
இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி கால்பந்து தரவரிசையில் பின் தங்கி இருக்கும் சவூதி அரேபியாவிடம் சாதனை வெற்றி பெறும் என்றே கால்பந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
மெஸ்ஸியின் ரசிகர்கள்
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜெண்டினா கேப்டன் லயனல் மெஸ்ஸி இதில் அசத்துவார் என்றே உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சவூதி அரேபியாவில் கூட மெஸ்ஸிக்குதான் அதிக ரசிகர்கள் இருந்தனர். இதன் காரணமாக அந்நாட்டின் விளம்பர தூதராக மெஸ்ஸி நியமிக்கப்பட்டார்.
முதல் கோல்
இந்த நிலையில், போட்டியின் 9 வது நிமிடத்திலேயே பெனாலிட்டி கிக் முறையில் மெஸ்ஸி முதல் கோலை அடித்தார். உஷாரான சவூதி அரேபியா வலுவான தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அடுத்து அர்ஜெண்டினா அடித்த சில கோல்கள் ஆஃப் சைட் என நிராகரிக்கப்பட்டன. சவூதியின் கோல் கீப்பர் முஹம்மது அல் ஒவைஸ் சிறப்பான தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சவூதி வெற்றி
அர்ஜெண்டினா வீரர்கள் கஷ்டப்பட்டு அடிக்கும் கடினமான கோல்களையும் அவர் வலைக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினார். இந்த சூழலில் தங்கள் அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்புகளை பயன்படுத்திய சவூதி அரேபியா 2 கோல்களை அடித்து வெற்றியை தனதாக்கியது. சவூதி அரேபியாவின் இந்த வெற்றி உலக கால்பந்து ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்தது.
கொண்டாட்டம்
உலக கால்பந்து ஜாம்பவானான அர்ஜெண்டினாவை வீழ்த்தியதை சவூதி ரசிகர்கள் கோலாகளமாக கொண்டாடினார்கள். உலகக்கோப்பை தொடரையே வென்றதை சவூதி அரேபியா மறுநாள் உள்நாட்டு விடுமுறையே அறிவித்தது. சவூதி அரேபியாவின் வெற்றியை தொடர்ந்து அந்த அணி வீரர்களுக்கு அந்நாட்டு அரசு பல பரிசுகளை வழங்க உள்ளதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின.
பரவிய செய்தி
குறிப்பாக உலகில் வெகு சில பிரபலங்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் பல கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் கார்களை சவூதி அரேபிய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அந்நாட்டு அரசு வழங்க உள்ளதாக தகவல் வேகமாக பரவியது. சமூக வலைதளங்களை கடந்து முன்னணி ஊடகங்களிலும் இந்த செய்தி வேகமாக பரவி வந்தது.
உண்மை என்ன?
இந்த நிலையில் நேற்று போலந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிய சவூதி அரேபிய வீரர் சாலிஹ் அல் ஷெஹ்ரி முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க அவர், "ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு என்ற செய்தி தவறு. நாங்கள் நாட்டுக்காக விளையாடினோம். அர்ஜெண்டினாவுக்கு எதிரான வெற்றிதான் எங்களுக்கு கிடைத்த பரிசு." என்றார்.
Fact Check
வெளியான செய்தி
பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவூதி அரேபிய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அந்நாட்டு அரசு வழங்க உள்ளது.
முடிவு
ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு என்ற செய்திக்கு சவூதி அரேபிய வீரர் சாலிஹ் அல் ஷெஹ்ரி மறுப்பு