மிஞ்சி போன பழைய சோறு.. நீச்சத்தண்ணி குடித்தாலே ஆயுள் பெருகும்.. "அந்த" தொல்லையை துரத்தும் நீராகாரம்
சென்னை: நம் பெரியவர்கள் எதை செய்தாலும், அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.. அதில் ஒன்றுதான் இந்த பழைய சோறு அல்லது கஞ்சி தண்ணீர்.
நீச்சத்தண்ணி என்பார்கள்.. நீராகாரம் என்றும் சொல்வார்கள்.. ஐஸ் பிரியாணி என்றும் சொல்வார்கள்.. கடுமையான உழைப்புடன்கூடிய, பழைய சோறு, சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் போன்றவைகளை சாப்பிட்டே வாழ்நாளை கடத்தியிருக்கிறார்கள்.

நீராகாரம்: பழைய சோற்றுடன், பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், ஊறுகாய், கருவாடுத்துண்டு இவைகளுடன் சேர்த்து சாப்பிடும்போது, அதை "தேவாமிர்தம்" என்றே போற்றுகிறார்கள். நமக்கு மட்டுமல்ல.
சீனாவிலும் பாரம்பரிய சாப்பாடு என்றால், அது இந்த பழைய சோறுதானாம்.. நம்ம பக்கத்து மாநிலமான கேரளாவில்கூட, இதுபாரம்பர்யம் மிக்க உணவாக விளங்குகிறது. அவ்வளவு ஏன், உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.
உண்மையை சொல்லப்போனால், சாதத்தை விட, இந்த தண்ணீரில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. வழக்கமாக சாதத்தில் உள்ள இரும்பு சத்தைவிட, 21 மடங்கு இரும்புச்சத்து இந்த நீராகாரத்தில் உள்ளதாம். உடலில் எதிர்ப்பு சத்துக்களை அதிகரிக்க செய்வதால்தான், இதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.
மீந்துபோன சாதம்: சாதம் மீந்துவிட்டால், இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். இதனால், லட்சக்கணக்கான நல்ல, நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.. மறுநாள் வெறும் வயிற்றில் இதை குடிக்கும்போது, உடல் உஷ்ணத்தைம் மளமளவென குறைகிறது.. மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. அல்சர் புண்களும் மெல்ல மெல்ல ஆற துவங்கிவிடும்.. உடனடியாக உடலும் குளிர்ச்சி பெறுகிறது.. சிறுகுடல் ஆரோக்கியம் அடைகிறது.
மிகச்சிறந்த எனர்ஜி நிறைந்த பானமாகவும், உணவாகவும் திகழ்கிறது. இதனால், களைப்பும், அசதியும், சோர்வும், பலகீனமும் நீங்குகிறது. புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைப்பதில் மிகப்பெரிய பங்கினை இந்த பழைய சோறு தண்ணீர் வகிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், அலர்ஜியை போக்குகிறது. வயதான தோற்றத்தை தள்ளி போட செய்து, இளமையை தருகிறது. இந்த நீரை மட்டுமே, தலைக்கு கண்டிஷ்னராக பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி உறுதியாகவும் பளபளப்பாகவும் மாறுவதுடன், முடி உதிர்வதும் தடுத்து நிறுத்தப்படுகிறது. பழைய சோறு சாப்பிடுபவர்களுக்கு, அம்மை போன்ற தொற்று நோய்கள் வராதாம். மூளை செல்களை துாண்டி, நன்கு சிந்திக்க வைக்கும்.
ஆனால், பழைய சாதமாக நமக்கு கிடைக்க வேண்டுமானால், தண்ணீர் ஊற்றி 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியமாம்..

பழையது சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல் பெருத்துவிடும் என்பதெல்லாம் உண்மை கிடையாதாம். ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். மூல நோய் உள்ளவர்கள், பழைய சோற்றுடன் வெந்தயத்தை ஊற வைத்து அல்லது நல்லெண்ணையை ஊற்றி சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் மட்டும், டாக்டரின் ஆலோசனையில்லாமல் இதை சாப்பிடக்கூடாது.
ஆதி உணவு: வறுமையின் அடையாளமாகவே இந்த கஞ்சி தண்ணீர் பார்க்கப்பட்டாலும், மேல்தட்டு மக்களையும் கவரக்கூடியது.. அதனால்தான், ஸ்டார் ஹோட்டல்களிலம், மண் பாத்திரங்களில் இன்று இதை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.. எவ்வளவுதான நவநாகரீகம் மாறினாலும்கூட, இன்னும் பல நூற்றாண்டுக்கு நம்முடனே தொடர்ந்து பயணித்தே வரும் இந்த ஆதி உணவு...!












Click it and Unblock the Notifications