கிளுகிளுப்பு கீரை லச்ச கொட்டை.. லஜ்ஜ கீரையில் இவ்ளோ ஆச்சரியமா? இயற்கையின் "வயாக்ரா" லச்லச்கெட்டை இலை
சென்னை: கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான் என்றாலும், சில கீரைகளை தெரிந்தே ஒதுக்கிவிடுகிறோம்.. சில கீரைகளை தெரியாமல் ஒதுக்கிவிடுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த லச்சக்கெட்ட கீரை.
இந்த கீரைக்கு மட்டும் ஏகப்பட்ட பெயர்கள் உண்டு.. லச்லக்கெட்டை என்பார்கள்.. லச்சக்கொட்டை என்பார்கள்.. லச்ச கெட்ட கீரை என்பார்கள்.. நஞ்சு கொண்டான் கீரை என்பார்கள்.. நஞ்சுண்டான் கீரை என்பார்கள்.. இப்படி எத்தனையோ பெயர்களில் இந்த கீரைக்கு உண்டென்றாலும் லஜ்ஜை கீரை என்றே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

அகல இலைகள்: எந்த மண்ணிலும் வளரக்கூடியது.. எந்த தட்பவெப்பநிலையிலும் வளரக்கூடியது. இதன் இலைகள் அகலமாக இருக்கும்.. கீரையின் இலை, ஒரு அடி நீளமும் அரை அடி அகலமும் இருக்கும்.. நிறைய வீடுகளில் இந்த கீரையை அழகுக்காக பயன்படுத்தி வளர்க்கிறார்கள்.. ஆனால், இந்த கீரையில் நிறைய மருத்துவ சக்திகள் இருக்கிறதாம்.. இந்த கீரைகளில் வைட்டமின் A, C, போன்றவை நிறைய உள்ளது..
உடம்பிலுள்ள விஷத்தை முறிக்கும் திறன் இந்த கீரைக்கு உள்ளது.. அதனால்தான் இந்த கீரைக்கு "நஞ்சுண்டான் கீரை" என்று பெயர் வந்ததாம். உடலில் உள்ள அசுத்த நீரை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.. ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை சீராக்கக்கூடியது..
இந்த கீரையை சாப்பிட்டால் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. மூட்டுவலி வருவதற்கு காரணமே சுண்ணாம்புச்சத்து குறைபாடுதான்.. அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை பார்ப்பதாலும், உடம்பில் பித்தம் அதிகமாகி சூடு கிளப்பிவிடும்.. இதற்கெல்லாம் இந்த கீரை தீர்வாக அமைகிறது.
சளித்தொல்லை: இந்த கீரையில் இரும்புச்சத்து, தாதுக்கள் இரண்டுமே மூட்டு வலி பிரச்சனையை சரிசெய்யக்கூடியது.. நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்பட்டால் அவைகளை போக்கக்கூடியது இந்த கீரையின் மகத்துவம்.. நுரையீரல் பாதிப்புகள் விலகி, சளித்தொல்லைகளையும் நீக்கிவிடும்.. சிறுநீர் நன்றாக பிரிந்து, உடலில் ஏற்பட்டிருந்த வீக்கங்களும் குறைந்துவிடும்.
இந்த கீரையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.. இதன் நடுவில் உள்ள நரம்பை, கத்தியால் கீறிவிட்டு, எடுத்து விட வேண்டும்.. நரம்பை நீக்கியபிறகுதான், பொடிப்பொடியாக நறுக்க வேண்டும்.
சாதாரண கீரைகளை போலவே இதையும், பொரியல், துவையல், கூட்டு, சாம்பார், செய்யலாம்.. சிலர் இதை பயன்படுத்தி சூப் செய்வார்கள். இந்த கீரையை பாசி பருப்பு கூட்டு போல செய்யலாம்.
பொரியல் : கைப்பிடி அளவு பாசி பருப்பை ஊற வைத்து, லச்ச கொட்டையையும் 2 கைப்பிடி அலசி, பொடியாக நறுக்கி பருப்புடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கீரையை நன்றாக மசித்து, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்போ போட்டு மறுபடியும் கொதிக்க வைத்து இறக்கி, தாளித்து விட வேண்டும். அல்லது கீரையை சுத்தம் செய்து, பொடிபொடியாக நறுக்கி, 1 தக்காளி, 4 சின்ன வெங்காயம், கொஞ்சம் மிளகு சேர்த்து வேகவைத்து சூப்பாக சாப்பிடலாம்...
ஆண்களுக்கு வலிமை தரக்கூடிய கீரையாகும்.. இயற்கை வயாக்ரா என்றும் சொல்வார்கள்.. அதனால்தானோ என்னவோ, இதனை லஜ்ஜை கீரை என்கிறார்கள்.. இதையும் காரணத்தோடுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். லஜ்ஜை என்றால் வெட்கம் என்று பொருள்.
வழக்கமாக, ஆட்டு ரத்தத்தை பொரியல் செய்யும்போது, முருங்கை கீரை சேர்த்து செய்வார்கள்.. ஆனால், சிலர், முருங்கைக்கீரைக்கு பதிலாக இந்த லச்சக்கொட்டை கீரையை பயன்படுத்துவார்கள்.
ரத்தக்கீரை: வாணலியில் எண்ணை ஊற்றி, சோம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.. பிறகு, இந்த கீரையையும் சேர்த்து வதக்கி, சீரக தூள் சிறிது சேர்க்க வேண்டும். பிறகு, ஆட்டு ரத்தத்தை கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து கிளற வேண்டும். ரத்தம் வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, சிறிது தேங்காய் துருவல் மட்டும் சேர்த்து இறக்கினால், ரத்தக்கீரை பொரியல் ரெடி.
லஜ்ஜக்கீரையோ, லச்சக்கொட்டை கீரையோ, பெயர் எதுவானால் என்ன? இனி வீட்டிற்குள் அழகுக்காக மட்டுமே இந்த கீரையை பயன்படுத்தாமல், உணவாகவும் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது..!!












Click it and Unblock the Notifications