9/11 தாக்குதலின் 12வது நினைவு தினம்: மௌன அஞ்சலி செலுத்தும் அமெரிக்கர்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டதன் 12வது ஆண்டு நினைவு தினம் இன்று அமைதியாக அனுசரிக்கப்படவிருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது அல் கொய்தா தீவிரவாதிகள் இரண்டு விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.
2,753 பேர் பலியான இந்த தாக்குதல் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இந்நிலையில் 12வது நினைவு தினத்தையொட்டி இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில் உள்ள நினைவிடத்தில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படவிருக்கிறது.

முதல் தாக்குதல் காலை 8.46 மணிக்கு நடந்ததால் அந்த நேரத்திலும் இரண்டாவது தாக்குதல் நடந்த 9.03 மணிக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்படவிருக்கிறது.
இந்த சம்பவம் நடந்த அன்று காலை 9.37 மணிக்கு வாஷிங்டனில் உள்ள பென்டகன் கட்டிடமும் தாக்கப்பட்டதில் 184 பேர் பலியாகினர். இன்று பென்டகனில் நடக்கும் நினைவு தின நிகழ்ச்சியில் பலியானவர்களின் குடும்பத்தார் மத்தியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உரை நிகழ்த்துகிறார்.
இந்த கொடூரத் தாக்குதல் நடந்த அன்று காலை 9.45 மணிக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தென்மேற்கு பெனிசில்வேனியாவில் விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலியாகினர். இந்த விமானத்தை கடத்தியவர்கள் பயணிகள் மற்றும் சிப்பந்திகள் தாக்கக்கூடும் என்று அஞ்சி விமானத்தை விபத்துக்குள்ளாக்கினர் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பலியான 40 பேரின் நினைவாக அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்படவிருக்கிறது.












Click it and Unblock the Notifications