9/11 தாக்குதல் நினைவுநாள்: அமெரிக்க, இஸ்ரேல் இணையதளங்களை முடக்கப் போவதாக ஹேக்கர்கள் மிரட்டல்
நியூயார்க்: அமெரிக்க வர்த்தக மைய கட்டிட தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று, அமெரிக்க, இஸ்ரேல் இணையதளங்களை முடக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஹேக்கர்ஸ்எனப்படும் இணையதள ஊடுறுவல்காரர்கள்.
கடந்த 2001ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் அல்குவைதா இயக்கத் தீவிரவாதிகள் உலக வர்த்தக மைய கட்டிடங்கள் மீது விமானங்களை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
அந்த கொடூரத் தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு இணையத் தளங்களை செயலிழக்க வைக்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்ட போதும், இந்த சமீபத்திய மிரட்டல் கடந்த 2ம் தேதி யூ ட்யூப் வீடியோ வாயிலாக விடுக்கப்பட்டுள்ளது. இதனை மூன்று ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர். அனானிமஸ், அனான்கோஸ்ட் மற்றும் ஃபல்லாகா என்ற ஹேக்கர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த மிரட்டல் வீடியோவில், கம்யூட்டர் வாய்ஸ் ஒன்று பின்வருமாறு கூறுகிறது. அதில், ‘அனைத்து முஸ்லீம் ஹேக்கர்களும் செப்டம்பர் 11 அன்று எங்களுடன் கைகோருங்கள். எங்களை செப்டம்பர் 11 அன்று எதிர்பாருங்கள்' என அறை கூவல் விடுப்பதாக ஒலிக்கிறது.
இந்த வருடத் துவக்கத்தில் இதே போன்று இண்டர்நெட் பிரச்சினையில் சிக்கி இஸ்ரேல் தவித்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலை இணையத்திலிருந்தே ஒழிப்பது தான் எங்கள் லட்சியம் என் முழங்கியுள்ளனர் ஹேக்கர்கள்.
மேலும், வீடியோவில் ‘ஹாய் இஸ்ரேல், எங்களை நினைவில் இருக்கிறதா? ஏப்ரல் 7 அன்று உங்களைக் கலங்கடித்தோமே அதே ஆட்கள் தான் நாங்கள். மீண்டும் தற்போது உங்களை அழிக்க வருகிறோம்' என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆன்லைன் மிரட்டல் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்ற போதும், இருநாட்டு மென்பொருள் வல்லுநர்களும் எச்சரிக்கையாகவே உள்ளனர்.