இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 4 கல்லூரிக்கு உயர்க்கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார்.
சென்னை கொளத்தூர் மற்றும் கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் லால்குடி, தென்காசி மாவட்டம் கடையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழநியில் சித்த மருத்துவமனை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. கல்லூரி தொடங்குவதற்கான இடம் தேர்வு, உள்கட்டமைப்புகள் மேம்பாடு, அடிப்படை வசதிகள், ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, தற்போதைய சூழ்நிலைக்கேற்ப புதிய பாடப்பிரிவுகள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளை மக்கள் நல பிரதிநிதிகள் துரிதப்படுத்த வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை கொளத்தூரில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் தற்காலிகமாக தனியார் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4 கல்லூரிகளிலும் BCA, http://B.Com., BBA., http://B.Sc., ( Computer Science ) என்று 4 பாடப்பிரிவுகளில் உடனடி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 4 கல்லூரிகளும் சுயநிதி கல்லூரிகளாகவே செயல்படும் என்றும் தடையில்லா சான்று, கூட்டு நிலை வைப்புத்தொகை செலுத்துவது உள்ளிட்டவற்றில் இருந்து விலக்களித்து உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications