காய்கறி நிறைய சாப்பிடலாம்.. இந்த வருடம் முதல்!
நிறையப் பேருக்கு இப்போது உடல் நல பாதிப்புகள் அதிகரித்து விட்டது. கொலஸ்டிரால், சுகர், பிபி என ஆளாளுக்கு பட்டம் வாங்கியது போல பெயருக்குப் பின்னால் ஏகப்பட்ட உடல் உபாதைகள்.
இந்த வருடம் இதுதொடர்பாகவும் ஒரு தீர்மானம் போடலாம் நாம். அதாவது பச்சைக் காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடுவது. உடலுக்குத் தேவையான பல சக்திகளைக் கொடுக்கவல்லது காய்கறிகள்,பழங்கள் என்பது மருத்துவர்கள் கூறும் நல்ல அறிவுரை. எனவே இந்த வருடத்தில் நாம் இந்தப் பழக்கத்தைக் கைக்கொள்ள முயற்சிக்கலாமே.
உணவே மருந்து என்பது போல நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிப்பது காய்கறிகள் தான். காய்களில் இருக்கும் சத்துகள் நம் உடலுக்கு வலு சேர்க்கிறது. இன்றைய நவநாகரீக உலகில் பலர் பாஸ்ட்புட் உணவுகளையே விரும்புகின்றனர். பீட்சா பர்கர் போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் உடல் எடை கூடி பல நோய்கள் உண்டாகின்றது.
வாரம் ஒரு முறை கீரை மற்றும் தினமும் வேக வைத்த காய்கறிகள் சாப்பிட வேண்டும். மதிய உணவில் காய்கள் அதிகமாகவும் சாதம் குறைவாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளில் நீர்ச்சத்து புரதச்சத்து நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. மா பலா வாழைப்பழம் மாதுளை சப்போட்டா ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதேனும் ஒன்று உங்களது மாலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.
எடை குறைக்க விரும்புவோரும் காலையில் பழம் மட்டும் உண்டு மதியம் காய்கறிகள் அதிகளவிலும் சாதம் குறைவாகவும் இரவு நேரத்தில் சப்பாத்தியும் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் ஒரே மாதத்தில் உங்கள் எடையில் அதீத மாற்றத்தைக் காணலாம். இயற்கை அன்னையின் வரப்பிரசாதங்களான காய்கறியும் பழங்களும் இந்த புத்தாண்டிலிருந்து அதிகமா எடுத்துக்கோங்க. உடம்பை நல்லா சிக்கென்று வைத்துக் கொள்ளுங்கள்.