தலையில் சும்மாடு, மூட்டை.. கால்கடுக்க நடந்து வர்றாரே.. இவர்தான் சீதாக்கா.. நம்புங்க இவர் ஒரு எம்எல்ஏ
ஹைதராபாத்: தலையில் சும்மாடு, தோளில் மூட்டையுடன்.. கல், மேடுகளில் நடந்து வருகிறாரே.. இவர் யார் தெரியுமா? இவர் ஒரு பெண் எம்எல்ஏ என்று சொன்னால் நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்பித்தான் ஆக வேண்டும்!! ஆம்.. தெலுங்கானா முலுக் பகுதியின் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ சீதாக்கா இவர்தான்!!
முலுக்... தெலங்கானா - சத்தீஸ்கர் இடையே கோதாவரி நதிக்கரையோரம் நிறைய மலைப்பகுதிகளில் இதுவும் ஒன்று.. தெலுங்கானா மாநிலத்தில் வனபகுதியில் உள்ள தொகுதி இது.. ஓங்கியுயர்த மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டு பகுதியில்தான் முலுக் இருக்கிறது.. இங்கு வசித்து வருபவர் சீதாக்கா!!
ஆரம்பத்தில் ஒரு மாவோயிஸ்ட் போராளியாக இருந்தவர்.. அப்போது இவர் பெயர் தன்சாரி அனன்யா... கடினமான வாழ்க்கை சூழலில்தான் இவர் பயணித்தார்.. இவரை போலவே மாவோயிஸ்ட்கள் நிறைய பேர் இந்த மலைப்பகுதியில் இருந்தால் ஓயாமல் போலீஸாருக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் இருக்கும்.. துப்பாக்கி சத்தம் வனத்தை கிழிக்கும்.
மாவோயிஸ்ட்கள்
கிட்டத்தட்ட 15 வருடங்கள் மாவோயிஸ்ட்டாகவே இருந்துள்ளார்.. முழுநேர மாவோயிஸ்ட்டான இவர் மீது ஏகப்பட்ட கேஸ்கள் இருந்தன.. ஆனால் மாவோயிஸ்ட் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், 1994-ம் ஆண்டு போலீசாரிடம் சரண் அடைந்தார்.. மனம் மாறினார்.. சட்டம் படித்து வக்கீலாகவும் உயர்ந்துவிட்டார். அதற்கு பிறகுதான் அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.
சீதாக்கா
முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தாலும், பிறகுதான் காங்கிரஸில் இணைந்துள்ளார்.. இப்போது அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலராகவும் உயர்ந்துள்ளார் சீதாக்கா.. மேலும் சத்தீஸ்கர் மாநில மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார். 2009, 2018-ம் தேர்தலில் நின்று காங்கிரஸ் எம்எல்ஏவானார்.
ஊரடங்கு
இது ஒரு மலைவாழ் பகுதி என்பதால் அடிப்படை வசதிகளே குறைவாகத்தான் இருக்கும்.. இப்போது கொரோனா தாண்டவமாடுவாலும், ஊரடங்கு என்பதாலும் அந்த மலைப்பகுதியில் சிக்கல்கள் ஏராளம்.. அங்கு தரமான ஆஸ்பத்திரி எதுவும் இல்லை.. போலீஸ் ஸ்டேஷன் இல்லை.. அவ்வளவு ஏன் சுடுகாடு கூட இல்லை.. எல்லாவற்றிற்குமே அதிகதூரட்ம கால்நடையாகவே நடந்து தங்கள் தேவைகளை தீர்த்து கொண்டவர்கள் இந்த பகுதி மக்கள்.
பழங்குடிகள்
இந்த சமயத்தில்தான் சீதாக்கா தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.. அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடிகள், பட்டியலின மக்களுக்கு சீதாக்கா இல்லாமல் பொழுதுகள் கழிவது சிரமம்.. அந்த அளவுக்கு அவர்களை கண்ணில் வைத்து பாதுகாத்து வருகிறார். மலை வாழ் கிராம மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.. இந்த சாப்பாடு எல்லாருக்குமே போய் எல்லா நாளும் கிடைக்கிறா என்பதை நேரடியாக கண்காணித்து வருகிறார்.
உணவு தானியங்கள்
மேலும் அங்கு காய்கறி மார்கெட்டுகள் இல்லை என்பதால், உள்ளூர் தொடர்புகள், ஊராட்சி நிர்வாகம் மூலம் உணவு தானியங்கள், காய்கறிகளையும் சீதாக்கா அனுப்பி வைத்து கொண்டிருக்கிறார்.. இவரது தொகுதியில் மொத்தம் 150 கிராமங்களுக்கும் மேல் உள்ளன.. அத்தனை கிராமங்களும் வயிறாற பசியாறுகின்றன. அதுமட்டுமல்ல, டிராக்டர், மாட்டு வண்டி என எது கிடைத்தாலும் அதில் ஏறி கொண்டு மலைவாழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதை தினசரி கேட்டறிகிறார்.
மூட்டைகள்
சில சமயங்களில், இது கடினமான மலைப்பகுதி என்பதால் இந்த உணவு பொருட்களை கொண்டு செல்ல ஆட்களும் கிடைப்பதில்லை... ஆனால் யாரையும் எதிர்பார்த்து சீதாக்கா காத்திருப்பதில்லை.. தலையில் ஒரு துணியை சுற்றி சும்மாடு வைத்து... அதன்மேல் மூட்டைகளையும் வைத்து கொண்டு பழங்குடி கிராமத்தை நோக்கி நடைபோடுகிறார்.. மாவோயிஸ்ட் வாழ்க்கையை வாழ்ந்ததாலோ என்னவோ, அந்த காட்டுப்பகுதி அத்தனையும் சீதாக்காவுக்கு அத்துப்படி.. ரகசிய பாதைகள் கூட இங்கு இருக்குமாம்.
அத்தியாவசிய பொருட்கள்
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைத்தாக வேண்டுமே என்ற உந்துதல் தவிர, வழியில் கிடக்கும் கல்லும், முள்ளும், பாறைகளும் சீதாக்கா கண்களுக்கு தெரிவதே இல்லை. அரிசி, பருப்பு, காய்கறி முதல் மாஸ்க் வரை அனைத்தும் இந்த பழங்குடி, பட்டியலின கிராம மக்களுக்கு கிடைத்து வருகிறது.. கடந்த 40 நாட்களாக இங்குதான் இவர் இருக்கிறார்!!
குவியும் பாராட்டு
இப்படி மூட்டையை சுமந்து செல்லும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. எத்தனை எம்எல்ஏ இப்படி மூட்டை தூக்கி கொண்டு காடு, மேடுகளில் ஏறி செல்வார்கள் என்பது தெரியவில்லை.. ஆனால் அன்று சீதாக்கா கையில் துப்பாக்கி.. இன்றோ காய்கறி.. இதுதான் சரித்திர வாழ்க்கை என்பது.. மலைமாவட்டம் முழுவதும் சீதாக்கா குரல்தான் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது!!