தமிழகத்தில் இன்று
இன்று வைகோவின் தமிழர் எழுச்சி மாநாடு
கோவை:
ம.தி.மு.க.வின் அரசியல் மற்றும் கொள்கை, வலிமையை உணர்த்தும் தமிழர் எழுச்சி மாநாடு சனிக்கிழமை ஈரோட்டில் துவங்குகிறது.
தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி உள்பட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள்இதில் கலந்து கொள்கின்றனர்.
தனி ஈழ ஆதரவு மற்றும் அடுத்து வரும் தமிழக சட்டசபைத் தேர்தல் ஆகிய இரண்டு முக்கிய விஷயங்களில் ம.தி.மு.க. வின் வலிமையை உணர்த்த இந்தமாநாடு வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு துவங்கும் முன்னரே, தமிழகத்தின் பிரபாகரன் என வைகோவை வர்ணித்து சில இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது. மேலும், பல இடங்களில்மாநாட்டிற்கு வெளியிடப்பட்ட விளம்பரங்களில் "புலி படத்தை பிரதானமாக இடம் பெற்றுள்ளது.
தமிழர் எழுச்சி மாநாடு என்ற வாசகத்திலும், பல சுவர் விளம்பரங்களிலும் இந்த விளம்பரங்கள் இடம் பெற்றன. இது தவிர, கோவை, ஈரோடுஆகிய நகரங்களில் வரையப்பட்டிருந்த சில விளம்பரங்களில் வைகோ "புலிக்குட்டியை கையில் வைத்திருப்பது போன்ற விளம்பரங்களும் இடம் பெற்றுள்ளன.
எனவே, இந்த தமிழர் எழுச்சி மாநாட்டில், ஈழப் பிரச்சினையில் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுந்தாலும்ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த சந்தேகத்திற்கு இன்னும் சில மணி நேரங்களில் துவங்கும் மாநாட்டில் விடை கிடைக்கும்.
இந்த மாநாட்டினால் அடுத்து ம.தி.மு.க. எதிர்பார்ப்பது, அகில இந்திய அளவில் தன்னை ஒரு பெரும் கட்சியாகக் காட்டிக் கொள்வது தான். அகிலஇந்திய அளவில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை அழைத்து இந்த மாநாட்டில் பங்கேற்க வைத்துள்ளார்வைகோ.
முதல்நாள் நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் உட்பட பலமுக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர்கள் அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மணிப்பூர் முதல்வர் நப்பாமாட்சா சிங், பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், ஆர்.எம். வீரப்பன் ஆகியோர் உட்பட முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் ம.தி.மு.க., திராவிடக் கட்சிகளில் வலிமையுள்ள ஒரு கட்சியாகத் தன்னைக் காட்டிக் கொண்டால், அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில்,தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழாது எனவும் எதிர்பார்க்கிறது.
ஏற்கனவே, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேரணி ஒன்றை ம.தி.மு.க. நடத்த திட்டமிட்டு, முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று அதனை ரத்துசெய்தது. இதனால் மகிழ்வுற்ற முதல்வர், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உறுதியளித்து விட்டார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர்களில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியைத் தவிர, அனைத்து தலைவர்களின் வருகையையும்உறுதி செய்யப்பட்டு விட்டது.