தமிழகத்தில் இன்று
உயிருக்குப் பயந்து வெளியேறும் பிஜி இந்தியக் குடும்பங்கள்
சுவா:
பிஜியில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையை அடுத்து பல இந்திய வம்சாவளிக் குடும்பங்கள் வெளியேறத் தொடங்கியுள்ளன.
ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான குழுவின் புரட்சிக்குப் பிறகு பிஜியில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய வம்சாவளிக்குடும்பத்தினரை பிஜி இனத்தவர் தாக்கி அவர்களது வீடுகளுக்குத் தீ வைக்கின்றனர். கார்களும், வீட்டு உபயோகப் பொருட்களும் திருடப்படுகின்றன.இந்தியர்கள் வளர்த்து வந்த கால்நடைகள் கொல்லப்படுகின்றன.
துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் இந்திய வம்சாவளிக் குடும்பப் பெண்களிடம் நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. மே 19-ம் தேதி நடந்தபுரட்சியில் இந்திய வம்சாவளிப் பிரதமரான மகேந்திர சவுத்ரி உள்பட பலர் புரட்சிப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவ்வப்போது சிலர்விடுவிக்கப்பட்டனர்.
இறுதியாக பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 18 பேர், 56 நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம்விடுவிக்கப்பட்டனர்.
பிஜி நாட்டவர்களைக் கொண்டு புதிய அரசு அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில்தான் பிணைக் கைதிகளை புரட்சிப் படையினர் விடுவித்தனர்.
புரட்சிக்குப் பிறகு புரட்சிப் படையினரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வம்சாவளியினர் மீது அவர்கள்தாக்குதல் நடத்தினர். இந்திய வம்சாவளியினரிடமுள்ள நிலங்களையும் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், பிஜியில் நிலவும் ஸ்திரமற்றதன்மை மற்றும் பாதுகாப்பற்ற நிலை ஆகியவற்றை அடுத்து இந்திய வம்சாவளிக் குடும்பத்தினர் பிஜியிலிருந்துஅதிக அளவில் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
தலைநகர் சுவாவுக்கு அருகே உள்ள தாவாசாமு என்ற பகுதியில் வசித்து வந்த 20-க்கும் அதிகமான இந்திய வம்சாவளிக் குடும்பத்தினர், பிஜிநாட்டவர்களால் தாக்கப்படுவோம் என்ற பயத்தின் காரணமாக அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
எங்களது எல்லா உடைமைகளையும் பிஜி நாட்டவர்கள் பறித்துக் கொண்டனர். இப்போது அணிந்து உடையைத் தவிர எங்களிடம் வேறு எதுவும் இல்லை.உயிருக்குப் பயந்து வெளியேறிக் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறினர்.
புரட்சிப் படை ஆதரவாளரான ராது ஜோசெஃபா ஐலாய்லோ, பிஜியின் புதிய அதிபராக செவ்வாய்க்கிழமை பதவியேற்க உள்ளார். அவர் பதவியேற்றபிறகு இந்திய வம்சாவளியினரின் நிலைமை மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, புதிய அரசு தொடர்பாக புரட்சிப் படையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். புதிய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் நாடு முழுவதும்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புரட்சிப்படையினரின் நடவடிக்கையை அடுத்து ஜூலை இறுதி வரை அவசர நிலையை பிஜி ராணுவ அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.
புரட்சிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிஜி நாடு, வெளிநாடுகளில் இருந்தும் பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது. உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில்உள்ள பிஜி நாட்டில் இப்போது சர்க்கரை உற்பத்தி குறைந்துவிட்டது. பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்குச் சென்றுவிட்டது.
ஏற்கெனவே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பிஜிக்கு வருவதைக் குறைத்துக் கொண்டுவிட்டனர். இந் நிலையில் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகியநாடுகள் பிஜி நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.