தமிழகத்தில் இன்று
வருகிறது ஜூலை 23....நடுக்கத்தில் திருநெல்வேலி...
ஒரு வித பயம் கலந்த அமைதியில் இருக்கிறது திருநெல்வேலி. மறுபடியும் ஊர்வலம், கலவரம் என்று ரணகளமாகிவிடக் கூடாது என்று மக்கள்மத்தியில் ஒரு வித கவலை பரவியிருக்கிறது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனை விவகாரம் மறுபடியும் விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என்பது தான் இந்த ஒட்டு மொத்தகவலைகளுக்கும் காரணம்.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலையின் உச்சியில் இருக்கிறது மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம். ஆயிரக்கணக்கான ஏக்கரில்மலைக்கு இயற்கை பச்சைக் குடைபிடித்தது மாதிரி எங்கு திரும்பினாலும்..வாவ் என்று மெய்சிலிர்க்க வைக்கும் பேரழகைக்கொண்ட தோட்டங்கள்அவை.
இருவருடங்களுக்கு முன்பு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குரல் கொடுக்கஆரம்பித்தார். கூலி உயர்வு, தொழிலாளர்கள் கொடுமைக்கு எதிர்ப்பு என்று தொழிலாளர்கள் களம் இறங்க..மேற்குதொடர்ச்சி மலை அதிர்ந்து.
பறவைகளின் சப்தங்களும், விலங்குகளின் சப்தங்களும் கேட்டுவந்த அந்த மலைப் பிரதேசத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் வெடிகுண்டு சத்தங்களும் கேட்டஆரம்பித்தன.
அந்தோணி முத்து என்கிற சூப்பர்வைசர் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார் என்பதற்காகமாஞ்சோலையிலேயே தீர்த்துக் கட்டப்பட்டார்.
அந்தோணி முத்து கொலை வழக்கில் மொத்தம் பதினோரு பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பதினோராவது குற்றவாளியாக டாக்டர்கிருஷ்ணசாமியும் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரம், தடியடி தொடர்ந்ததில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீது போலீஸார் பல விதமானவழக்குகளை பதிவு செய்தனர்.
தொழிலாளர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை போலீஸார் உடனே வாபஸ் பெற வேண்டும், டாக்டர் கிருஷ்ணசாமி மீதுள்ள கொலை வழக்கையும் திரும்பப்பெற வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர் தொழிலாளர்கள்.
தொழிலாளர்களின் குடும்பப் பெண்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் தனவேல் வீட்டு முன் பெண்கள் ஆர்பாட்டம் நடத்தினர். பெண்களையும்கைது செய்தது போலீஸ்.
இதனால் போராட்டம் இன்னும் வேகமானது. தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மீதுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெற வேண்டும் என்றுகளத்தில் இறங்கினார் டாக்டர் கிருஷ்ணசாமி.
மற்றொரு போராட்டத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது. 1999-ம் வருடம் ஜூலை 23ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்போராட்டம் என்று அறிவித்தார். அந்த நேரத்தில் புதிய தமிழகம், த.மா.காவுடன் கூட்டணியில் இருந்தது.
த.மா.கா தலைவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அன்று காலை போராட்டம் ஆரம்பித்த சில மணி நேரத்தில் கலவரம் வெடித்தது.போலீஸார் தடியடி- துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீஸாரிடமிருந்து தப்பித்து ஒடிய தொழிலாளர்கள் வழி தெரியாமல் எதிரில் இருந்த தாமிரபரணி ஆற்றில்குதித்தார்கள்.
ஆற்றிலும் நீர் அதிகமாக இருக்க போராட்டத்தில் கலந்து கொண்ட பதினேழு பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்து போனார்கள்.
அதன் பிறகும் பல நாட்கள் திருநெல்வேலி மயான அமைதியிலேயே இருந்தது. தற்பொழுது ஒரு வழியாக பிரச்சனைகள் அடங்கிக் கிடக்கின்றன. வரும்ஜூலை 23-ம் தேதியோடு இந்த சம்பவங்கள் நடந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது.
இருபது நாட்களுக்கு முன் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் நிருபர்களிடம் பேசினார். திருநெல்வேயில் கருப்புக்கொடி ஏற்றுவோம். தாமிரபரணி ஆற்றில்மூழ்கி இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 23-ம் தேதி துக்கதினமாக கருதப்படும் என்று கூறியுள்ள கிஷ்ணசாமி அன்றைய தினம் நெல்லைஜங்ஷனில் இருந்து எனது தலைமையில் மெளன ஊர்வலம் நடக்கும். அந்த ஊர்வலம் தாமிரபரணிக் கரையில் முடியும். அங்கே கூட்டம் நடத்தப்படும் என்றார்.
மறுபடியும் ஊர்வலம், கூட்டம் என்றால் பிரச்சனை உருவாகும் என்று கவலையில் இருக்கிறது மாவட்ட நிர்வாகம். இரவு பத்து மணிக்கு மேல்மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்துப் பணியும் தொடர்கிறது. பகலிலேயே பஸ்கள் சற்று நடுக்கத்துடன் தான்ஒடிக்கொண்டிருக்கின்றன.
ஜூலை 23-ம் தேதி அமைதியாக கடக்க வேண்டும் என்கிற பயத்தில் இருக்கிறார்கள் நெல்லைவாசிகள்.