நெல்லை, குமரியில் வெள்ள அபாயம்
எழுதி எழுதி மாளாது போல் இருக்கிறது வீரப்ப மகாத்மியம். இந்த வாரமும் தொடர்கிறது.
தமிழக, கர்நாடக முதல்வர்கள், நக்கீரன் ஆசிரியர் கோபால் - ஆகிய மூவர் மீதும் ஒரு மும்முனைத் தாக்குதல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட -அதற்கு நக்கீரன் ஆசிரியர் நேரடியாகவும், தமிழக முதல்வர் மறைமுகமாகவும் பதிலளிக்க- இடையில் தமிழக காங்கிரஸ் தலைவர் புகுந்து ஜெயலலிதாவைத்தாக்க - காளிமுத்துவும், ஜெயலலிதாவும் பதில் அறிக்கைகள் விட்டு, மற்றவர்களை ஒரு பிடி பிடிக்க - நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால்வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசிவது போல, இரு மாநில முதல்வர்கள் மீது அ.தி.மு.க. தரப்பிலிருந்து வீசப்பட்ட மிளகாய்ப் பொடி, சோனியா காந்தி மீதும்விழ ... எந்தப் பத்திரிக்கையைப் புரட்டினாலும் சில தினங்களாக இந்த வசை மழைதான்!
நக்கீரன் ஆசிரியரைத் தனிப்பட்ட முறையில் தாக்கியதையும், இரு மாநில முதல்வர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியதையும் தவிர்த்துப்பார்த்தால், ஜெயலலிதா அறிக்கையில் தவறு சொல்ல பெரிதாக எதுவும் இல்லை.
ராஜ்குமார், வீரப்பன் வசம் இருக்கும்போதே, மிலிட்டரி மூலம் வீரப்பனை தாக்கி விட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதும், நடைமுறைக்குசாத்தியமானது அல்ல என்று தான் நாம் நினைக்கிறோம்.
ஏதாவது எசகு பிசகாக நடந்து விடக்கூடிய வாய்ப்பு உண்டு. அதுவுமன்றி, இதுவரை பணயக் கைதிகளை விடுவிக்க உலகில் சில இடங்களில் கமாண்டோதாக்குதல் நடந்த போது, அவர்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தாக்குதல் படையினருக்குத்தெரிந்திருந்தது.
ஆனால், வீரப்பன் விஷயத்தில் அப்படி இல்லை. காட்டிற்குள் புகுந்து தேட வேண்டும். அல்லது ஹெலிகாப்டர் மூலம் இறங்க வேண்டும். இப்படி எதைச்செய்தாலும், கமாண்டோக்கள் நெருங்குவதற்கு முன்பாக பதுங்கிவிடக் கூடிய வாய்ப்பு வீரப்பன் கோஷ்டிக்கு உண்டு என்பது மட்டுமல்ல தடங்கல் -கோபத்தில் ராஜ்குமாரை அந்த வெறியன் ஏதாவது செய்து விட்டால் என்ன அதன்பிறகு கர்நாடகத் தமிழர்களை யார் காப்பாற்றுவது? இதைத் தவிர,கமாண்டோ தாக்குதல் என்பது, சவால் விட்டு, அறிக்கை வெளியிட்டு, தண்டோரா போட்டு, முரசு கொட்டி செய்கிற காரியமல்லேவ! எதிர்பாராத்தன்மை நிறைந்த திடீர்த் தாக்குதல் - கமாண்டோ நடவடிக்கைக்கு இன்றியமையாதது.
இப்படிப்பட்ட காரணங்களினால், ஜெயலலிதா கூறியது செயல்படுத்தக் கூடியது அல்ல. ஆனால் தன் ஆட்சியின் போது, வீரப்பனைப் பிடிக்க முயற்சிகள்பற்றியும், அவை அளித்த பலன் பற்றியும் ஜெயலலிதா கூறியது நியாயமானதே.
அவர் ஆட்சியில் வீரப்பன், ஒரு நிலையில் ஓடி ஒளிந்தான்; இப்போது தி.மு.க. ஆட்சியில் சீறிப் பாய்கிறான். இந்த வித்தியாசம் மறக்கத்தக்கது அல்ல.வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இப்போதாவது வந்திருக்கிறதா என்பதே கூட சந்தேகம்தான்.
ஜெயலிலதா, கோபாலைப் பற்றி தனிப்பட்ட முறையில் தாக்கியது அநாகரிகம் என்றால் - அதற்கு பதிலாக கோபால் ஜெயலலிதாவைப் பற்றிஏசியது அருவருக்கத்தக்கதாக இருந்தது.
ஆனால் அவருடைய பதிலில் ஓர் உண்மை இருந்தது. பணயக் கைதியை விடுவிக்க ஜெயலலிதா ஆட்சியும்தானே வீரப்பனுக்குப் பணம் கொடுத்தது?அப்போது எடுப்பதுதானே கமாண்டோ நடவடிக்கையை? என்று அவர் கேட்டிருக்கிறார்.
நியாயமான கேள்வி. இதை ஜெயலலிதா மறுத்தாலும், அந்த மறுப்பில் உண்மை கலப்பில்லை என்றே தோன்றுகிறது. வீரப்ப நல்வாழ்வுக்காக, இந்தஅரசைப் போலவே, சென்ற அரசும் நிதி உதவி செய்திருக்கிறது என்பது ஒப்புக் கொள்ளப்படாத உண்மை.
அதே சமயத்தில் ஏற்கனவே நாம் சொன்னது போல, ஜெயலலிதா ஆட்சியில் வீரப்பன் மீது நடவடிக்கைகள் தீவிரமடையவும் செய்தன. தி.மு.க. ஆட்சியில்நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.