துடுப்புப் படகு: முடிந்தது இந்தியாவின் சவால்
கே: உயர்மட்டக் குழு என்றால் என்ன?
ப: உயர்ந்த நிலையில் இருக்கிற மட்டமான விஷயம் - உயர்மட்டம்.
கே: இன்றைய தமிழக அரசு, தான் மக்களுக்கு எல்லாம் செய்து விட்டதாக நினைத்துக் கொண்டு பேசுவது பற்றி...?
ப: வேறு எந்த அரசும் பேசாத பேச்சா இது? ஜெயலலிதா தன் ஆட்சியைப் பற்றி பேசியதையெல்லாம் இப்போது மறந்து விட்டால்தான், இவர்கள்பேசுவது வினோதமாகத் தெரியும்.
கே: ஜெயலலிதா தலைமையில் மூப்பனார், பெரியார் விழா நடத்துவது குறித்து...?
ப: வீரமணி தலைமையில், பிரபாகரன் விழாவில் அவர் பங்கேற்காத வரையில் திருப்தி.
கே: வீரப்பன் விவகாரத்தை திசை திருப்பவே கருணாநிதி அரசு தன் மீது புதுப்புது பொய் வழக்குகளைப் போடுவதாக, ஜெயலலிதா சொல்லும் குற்றச்சாட்டுகுறித்து?
ப: அப்படியானால் - வீரப்பன் விவகாரம் எழுவதற்கு முன்பாக போடப்பட்ட வழக்குகள் எல்லாம் நியாயமானவை என்று ஜெயலலிதா ஒப்புக்கொள்கிறாரா? தேவலையே!
கே: என் வாழ்வின் லட்சியம் இது என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு ஏதாவது லட்சியம் உங்களுக்கு உள்ளதா?
ப: ஒன்றும் கிடையாது. அந்த மாதிரி சுமையே இல்லாதவன் நான்.
கே: ஆர்.எஸ்.எஸ். சில் இருந்து பா.ஜ.க. எந்த வகையில் வேறுபடுகிறது?
ப: பெரியார் கழகத்திலிருந்து, தி.மு.க. எந்த வகையில் வேறுபட்டதோ, அந்த வகையில்.
கே: மற்றவர்களுக்கு நற்சான்று வழங்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்; மற்றவர்களிடம் நற்சான்று முத்திரை பெறும் நிலையில் இல்லைஎன்கிறாரே கி.வீரமணி ! இது குறித்து...?
ப: போலி நற்சான்றிதழ்கள் வழங்குகிற அமைப்புகள் பற்றி அவ்வப்போது செய்தி வருகிறதே? படிப்பதில்லையா?
கே: ராஜ்குமார் விடுதலை சம்பந்தமாக, தன்னை சந்திக்க இரு மாநில முதல்வர்களும் காட்டுக்கு வர வேண்டும் என்று வீரப்பன் கோரிக்கைவிடுத்தால் ஏற்றுக் கொள்வார்களா?
ப: மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
கே: இந்திய விமானக் கடத்தலை மத்திய அரசு கையாண்ட முறை; ராஜ்குமார் கடத்தலை இரு மாநில அரசுகள் கையாண்ட முறை - ஒப்பிடுங்கள்...?
ப: கடத்தப்பட்ட விமானம் - நின்றது, அயல்நாட்டில்; அதுவும் நம்மோடு நட்புறவு இல்லாமல் பாகிஸ்தானுடன் கூட்டுறவு உள்ள ஒரு நாட்டில்,ராஜ்குமார் வைக்கப்பட்டு இருப்பது - நம் நாட்டில். இந்த வித்தியாசத்தை மறந்து, இந்த இரு நிகழ்ச்சிகளை ஒப்பிட நான் தயாராக இல்லை.
கே: பாரதீய ஜனதா கட்சி வளர வளர அதன் கட்டுக் கோப்பும் குலைந்து கொண்டே வருவது பற்றி ...?
ப: பெட்டிக் கடையாக இருக்கும் போது, அங்கே வேலை செய்கிறவர்கள் கட்டுப்பாட்டுடன் செயல்படுவார்கள்.
வியாபாரம் பெருகி, அந்தப் பெட்டிக்கடை, ஒரு நிறுவனமாக வளரும்போது - ஊழியர்கள் எண்ணிக்கையும் பெருகும்; அதனால் கட்டுப்பாடு குறையும்.வியாபாரம் பெருகுவதால், பணப் புழக்கம் அதிகமாகும்; ஊழலும் புகுந்து விளையாடும்.
பா.ஜ.க. முன்பு பெட்டிக்கடை; இப்போது வர்த்தக நிறுவனம்.
கே: நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக முடிக்க, நீங்கள் கூறும் யோசனை என்ன?
ப: வாய்தாக்கள் கொடுக்கப்படுவது வாடிக்கை - என்ற நிலை மாறி, வாய்தா கிடைப்பது மிக மிகக் கடினம் என்ற நிலை தோன்ற வேண்டும்.
அப்பீல்கள் செய்கிற வாய்ப்பு குறைய வேண்டும். அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகள் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்ல முடியும் - என்றநிலையும் வரவேண்டும்.
கே: நீங்கள் கட்சி ஆரம்பித்தால், எந்தக் கட்சி கடுமையாக பாதிப்பு அடையும்?
ப: ராஜாராம், எஸ்.டி.எஸ்., பண்ருட்டி ... போன்றவர்கள் ஆரம்பித்திருக்கும் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஏற்படலாம். மற்றபடி எந்தக்கட்சிக்கும் ஒரு பாதிப்பும் இருக்காது.
கே:வாஜ்பாய்க்கும், அத்வானிக்குமிடையே பெரும் தகராறு என்று ஒரு வடநாட்டுப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதாமே? அத்வானியின்ஆதரவாளர்கள் சிலர் ஒரு தொழிலதிபரைச் சந்தித்து, வாஜ்பாய்க்கு எதிராக பேசியதாகவும், இதுபற்றி அத்வானியிடமே நேரிடையாக வாஜ்பாய் கேட்டுவிட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறதாமே? என்ன விஷயம்?
ப: நீங்கள் சொல்கிற மாதிரி செய்தி வெளியிருப்பது வாஸ்தவம்தான். ஆனால் அந்தச் செய்தி உண்மையானதல்ல. இதுபற்றி, விவரமறிந்த ஒருவரிடம் நான்பேசினேன். அவர் மூலம் கிடைத்த தகவலைக் கூறுகிறேன்.
...சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் மகன், வாஜ்பாயைச் சந்தித்து, அத்வானியின் ஆதரவாளர்களான புஞ்ச், தீனாநாத் மிஸ்ரா போன்றவர்களும், ஷெனாய்என்ற பத்திரிக்கையாளரும் என் தந்தையைச் சந்தித்தார்கள்; உங்களுக்கு எதிராக அவர்கள் பேசி, என் தந்தையின் ஒத்துழைப்பை நாடினார்கள் என்றுகூறியிருக்கிறார்.
இந்தத் தகவலை அத்வானியிடம் வாஜ்பாய் தெரிவித்தார். அத்வானி வியப்படைந்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்திருக்கிறார்.
அவர்களுக்கும் வியப்பு. அவர்களில் ஒருவரான ஷெனாய், அந்தத் தொழிலதிபரிடமே என்ன இது புரளி? என்று விசாரித்தார்.
உடனே அந்தத் தொழிலதிபர் இதெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது ; எல்லாம் பிரதமரின் காரியதரிசி மிஸ்ரா செய்திருக்கிற வேலை . பிரதமர்மறதி காரணமாக தவறாக என் மகன் பேசியதாக சொல்லியிருகிகறார் என்று கூறிவிட்டார்.
இது அத்வானிக்கும். வாஜ்பாய்க்கும் தெரிவிக்கப்பட்டது. இருவருக்குமே அதிர்ச்சி. இதில் தொழிலதிபர் ஒரு பைத்தியக்காரியத்தனம் செய்தார். தன்னைநாடியதாகக் கூறியவர்களில், குருமூர்த்தியின் பெயரையும் அவரே சேர்த்தார்.
அத்வானிக்கு நெருக்கமானவர் குருமூர்த்தி என்பதால், இவர் பெயரைச் சேர்த்தால் சந்தேகம் வலுக்கும் என்பது அவர் கணக்கு. ஆனால், அதுநேர்மாறான விளைவை ஏற்படுத்தியது.
குருமூர்த்தி அந்த தொழிலதிபரை கடுமையாக எதிரப்பவர்;கையால் அவர் பெயரைச் சேர்த்ததில் சந்தேகம் வலுத்தது. இதற்கிடையில் ஏற்கனவேசொன்ன மாதிரி, பிரதமர் அலுவலகத்தின் மீதே தொழிலதிபர் பழி போட, அவருடைய வேலைதான் இது - என்பது தெளிவாகி விட்டது.
அத்வானிக்கும், வாஜ்பாயுக்குமிடையே பிளவைத் தோற்றுவிக்க அந்தத் தொழிலதிபர் செய்த முயற்சி தோற்றது. உண்மை இப்படி இருக்க, அந்தத்தொழிலதிபர் கூறியதை வைத்து, தவறான செய்திகள் வெளியாயின. இவ்வளவுதான் விஷயம்.
இதுதான் நான் விசாரித்தறிந்த விவரம்.
கே: நக்கீரன் பத்திரிக்கையில், உங்களை மீண்டும் தாக்கியிருக்கிறார்களே?
ப: தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் வீரப்பன் இப்போது முதல்வர் ; கருணாநிதியும், கிருஷ்ணாவும், அந்த முதல்வரின் பி.ஏ.க்கள் அந்தமுதல்வர் போடுகிற உத்திரவுகளை. தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் சென்று அவற்றை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிற பணிதான்இவர்களுடையது என்று நான் சில பத்திரிக்கைகளுக்கும். டி.வி. சேனல்களுக்கும் பேட்டியளித்திருந்தேன்.
இது எல்லா பத்திரிக்கைகளிலும், டி.வி. க்களிலும் சரியாக வந்தது - டைம்ஸ் ஆஃப் இந்தியாவைத் தவிர. அதில் நான் கோபால் தான் இப்போது இருமாநில முதல்வர் என்று கூறியதாக வந்து விட்டது. மற்ற பத்திரிக்கைகளிலும், டி.வி. க்களிலும் என் கருத்து சரியாக வெளியானதால், இதை நான்அலட்சியம் செய்து விட்டேன்.
அது என் தவறுதான்; மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். இதைப் படித்த நக்கீரன் கட்டுரையாளருக்கு கடும் கோபம் வந்திருக்கிறது. அது எப்படிகோபாலைப் பற்றி இப்படி எழுதலாமா ? என்று கோபித்து, அவர் கட்டுரை எழுதியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு எனக்குத் தோன்றுவது என்னவென்றால் - டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த மாதிரியே கூட கருத்துசொல்லியிருக்கலாம் போலிருக்கிறதே - என்ற எண்ணம்தான். அப்படி ஓர் அதிகார தொனி அந்தக் கட்டுரையில்!