பெட்ரோல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயராது
சென்னை:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும், பஸ் கட்டண உயர்வும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான் என்றாலும் பஸ் கட்டணம் உயராது என்றுமுதல்வர் கருணாநிதி சென்னையில் திங்கள்கிழமை கூறினார்.
(இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் வர இருப்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்! )
தலைமைச் செயலகத்தில் முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையுமா என்பது குறித்து இப்போது கருத்துக் கூற முடியாது. தேர்தல்வரும்போது தான் தெரியும்.
சட்டப்பேரவைத் தேர்தல் முன்கூட்டியே வருவது போன்ற நிலை இப்போது இல்லை. தேர்தல் நடத்தை விதிகளை எங்கள் கூட்டணியில் உள்ள பா.ஜ.க,ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் தி.மு.க.ஏற்றுக் கொண்டுள்ளது.
அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை வழங்குவதை சாத்தியமாக்க வேண்டும். அதைத் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்.
பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை வரியை 5 சதவீதம் குறைக்கும்படி மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம் நாயக் கூறியுள்ளார்.
விற்பனை வரியைக் குறைப்பது பற்றி அரசு பரிசீலிக்கும். அதே சமயம் பஸ் கட்டணத்தை உயர்த்தும் உத்தேசம் இல்லை என்றார் கருணாநிதி.