"நீட்டு கூட்டு மடக்கு பெருக்கு !
ஓர் ஒன் ஒண்னு, முவிரெண்டு ஆறு... பள்ளியில் பிற மாணவர்களோடு சேர்ந்து கூட்டத்தோடு கோவிந்தாவாக வாய்ப்பாடு சொல்லியிருக்கிறோம்.(வாயால் பாடியே பெருக்கல் கணக்கு பார்ப்பது தான் வாய்ப்பாடு!). ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இதைப் பாடி வந்த வாய்களுக்கு ஓய்வுகொடுத்தது கால்குலேட்டர். இப்போது கம்ப்யூட்டர் வந்துவிட்டது. கணக்கு ஒரு பிரச்சனையே இல்லை.
ஆனால், நம் மூதாதையர்களுக்கு இருந்த அதீதமான கணித அறிவு இப்போது நமக்கு இல்லை. இதை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். இதற்குகம்ப்யூட்டரும் கால்குலேட்டருமே முக்கியக் காரணம் என்றால் அதில் தவறு ஏதும் இல்லை.
நமது முன்னோர்கள் இந்தக் கருவிகளின் உதவிகளே இல்லாமல் தான் சூரியனின் தூரத்தையும், பூமியின் விட்டத்தையும் கணக்கிட்டார்கள். கிரகங்களின்சுற்றுக் காலத்தை நிர்ணயித்துச் சொன்னார்கள். பெரிய பெரிய கோபுரங்களை எந்த சிவில் இன்ஜினியரிங்கும் இல்லாமல் உயர்த்திக் காட்டினார்கள்.
ஆனால், தொழில்நுட்பம் என்ற இனிய ராட்சசனிடம் முன்னோர்கள் நமக்கு கொடுத்துச் சென்ற மனக் கணிதம் என்ற அற்புதமான சொத்தை நாம்அடகு வைத்துவிட்டோம்.
இந்த கணித முறை சங்க கால இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன என்கிறார் மும்பைத் தமிழர் பி.வி.என். மூர்த்தி.
இலக்கியத்தில் இடம் பெற்ற கணிதம் ஒன்றை உதாரணத்தோடு விளக்குகிறார். இதற்கு சுலபக் கணக்குச் சூத்திரம் என்று பெயர்.
""நீட்டு கூட்டு மடக்கு பெருக்கு என்ற சூத்திரத்தை எடுத்துக் கொள்வோம்.
5க்கும் மேலுள்ள எண்களைப் பெருக்க இந்த முறை பயன்படுகிறது.
உதாரணமாக 7 ஐயும் 8 ஐயும் பெருக்க வேண்டும் என எடுத்துக் கொள்வோம்.
7 ஐயும் 8 ஐயும் பெருக்கினால் 56 .இதில் இரண்டு எண்களிலும் 5 ஐ கழித்து விடுங்கள். 7 ல் மீதமுள்ள எண் 2. இதற்கு சமமாக ஒரு கையில் இரண்டுவிரல்களை நீட்டிக் கொள்ளுங்கள்.
அடுத்த கையில், 8 என்ற எண்ணிற்கு 5ஐ கழித்து விட்டு மீதியுள்ள 3ன்றிற்கு 3 விரல்களை நீட்டுங்கள்.
இப்போது இரு கைகளிலும் நீட்டியுள்ள விரல்களின் எண்ணிக்கை 5. அதாவது இது பத்தாவது ஸ்தான எண் 5.
தற்போது மடங்கியுள்ள விரல்களைக் கவனியுங்கள், ஒரு கையில் இரண்டு விரல், மற்றொரு கையில் 3 விரல்கள். இரண்டையும் பெருக்கினால் 6. இதுஒன்றாவது ஸ்தான எண்.
இரண்டையும் இணைத்தால் 56.
அதாவது நீட்டிய விரல்களைக் கூட்டு. மடக்கிய விரல்களைப் பெருக்கு என்பது தான் நீட்டு கூட்டு மடக்கு பெருக்கு சூத்திரம்.
இப்படி அட்டகாசம் செய்திருக்கிறார்கள் நமது கொள்ளு கொள்ளு தாத்தாக்கள். ஆனால், இந்த கணித முறையை தாத்தாக்களோடு சேர்த்து சுலபமாகநாம் மறந்துவிட்டு நிற்கிறோம்.
தமிழ் இலக்கியங்களில் கணிதம் மட்டுமல்ல, அறிவியிலும் பொதிந்து போய்க் கிடக்கிறது. இதே போன்று சித்தர் பாடல் நூல்களில் ஆயிரக்கணக்கானமருத்துவக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இவையெல்லாம் ஆராய்ந்து அறிவியல் பூர்வமான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் தமிழர்களை மிஞ்சஆள் இல்லை என்கிறார் மூர்த்தி.