தமிழ்த் தாயை வழிபடுவதற்கான சில முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
மலர் மாலை , நறும்புகை முதலியவை திருமுற்றத்தில் அதற்கென உள்ள தாம்பாளம் முதலியவற்றில் படைக்கப் பெறும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் திருவுருவங்கட்கு எண்ணெய் சார்த்தி திருநீராட்டுச் செய்யப் பெறும். மூர்த்திகட்குத் திருநீராட்டு செய்யும் போது அதற்கென அன்று ஆக்கிய தொன்னை போன்றவற்றாலேயே நீராட்ட வேண்டும். உலோகம், மரம், மண் கலன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது (திருக்குட நீராட்டு விழா போன்ற பெருஞ்சாந்திக் காலங்களில் மட்டும் இவ்விதி தளர்த்தப் பெறும்.
தமிழ்த்தாய் முதலிய வழிபாட்டுத் திருவுருவங்கட்கு ஆடை, அணிகலன், மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் மூர்த்திகளை எவ்வகையானும் ஒட்டாமல் அணி செய்யப்படும்.
மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் தமிழ் தெய்வத்திற்குப் படைக்கப்படுகின்றன.
கோவில் பொது வழிபாடு நிறைவேறியதும் தேங்காய், பழம், மலர் முதலியன நறைந்த படையல் தாம்பாளத்தை வந்திருக்கும் பெருமக்களில் வயது, அனுபவம் ஆகியவற்றால் மூத்த ஒருவருக்கு (சாதி-மத-பேதமின்றி) வழங்கிய பின் யாவர்க்கும் சந்தனம், மலர், சர்க்கரை ஆகியவை அருட் பொருளாய் (பிரசாதம்) வழங்கப் பெறும்.
மூர்த்திகட்கு நீராட்டுவது (குடழுக்கு), ஆண்டு பன்னிரெண்டுக்கு மேல் போகாமல் வரையறை செய்து விட வேண்டும். எண்ணெய், பால், தயிர், இளநீர், பழச்சாறுகள், நிறுமண நீர், கங்கை, மந்திரக்கலய நீர், பன்னீர் போன்றவை திருநீராட்டுக் காலத்தில் பயன்படுத்தப் பெறும்.
மந்திரக் கலய நீரை புனித நீராக ஆக்குவதற்கு மூன்று, ஆறு, பன்னிருவர் இருந்து தமிழ்ப் பாசுரங்கள் பாடி பாராயணம் செய்ய வேண்டும். 16, 24, 32, 64, 96, 108 முறை மாறி மாறிப் பாசுரங்கள் ஓதப்படும். அத்துடன் போற்றி வணக்கம் ஓதி, மலரும் பச்சிலையும் தூவப்படும். இந்த மந்திரக் கலய நீரை மேளவாத்தியம், தீவட்டி முதலிய மரியாதையுடன் எடுத்துச் சென்று திருநீராட்டு செய்யப்படும்.
தமிழ்த் தாய் மீது, மரபுக்கேற்றவாறு புலவர் பெருமக்களைக் கொண்டு பாடல்கள் யாத்து "தமிழ்த் தாய் பிரபந்தம்"என தமிழ்த் தாய் கோவில் திறப்பின்போது நூல் வெளியிடப்பட்டது. அப்பிரபந்தப் பாடல்களை நாள்தோறும்கோவிலில் ஓதுவார் இசைக்க வழிபாடு நடைபெறுகிறது.
தமிழ் நாட்டில் எங்குமில்லாத தமிழ்த் தாய்க் கோவிலை திரு. வெங்கா அவர்களின் தலைமையிலான கம்பன்அறநிலை செவ்வனே நிர்வாகம் செய்து வருகிறது. இந்தக் கோவில் தமிழுக்கும், தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும்சீரும், சிறப்பும் தருவதாக அமைந்துள்ளது.
அடுத்த முறை காரைக்குடி போனால், இக்கோவிலுக்குச் சென்று, தமிழையும் தரிசித்து விட்டு வாருங்கள்.
சி. சிதம்பரம், எம்.ஏ., எம்.பில் (பி.எச்.டி),
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த் துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி.