குஜராத் வன்முறையை கண்டித்து நெல்லையில் ஸ்டிரைக்
மேலப்பாளையம்:
குஜராத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து, நேற்று மேலப்பாளையத்தில் ஒரு நாள் கடை அடைப்புநடைபெற்றது.
நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்று மேலப்பாளையம். நெல்லை மாவட்ட மத நல்லிணக்க நடவடிக்கைகுழு விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று, மேலப்பாளையத்தில் உள்ள வர்த்தகர் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஜமாத்துகள்கூட்டமைப்பு ஆகியவை நேற்று ஒரு நாள் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தின.
குஜராத் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்குள் மேலாக நடைபெற்று வரும் வண்முறைகளை கண்டித்தும் குற்றவாளிகள் மீதுபாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க கோரியும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்க கோரியும் பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரணங்கள் வழங்கக்கோரியும் மக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உத்திரவாதம் வழங்கக் கோரியும் நடவடிக்கைகள்எடுக்கும்படி வலியுறுத்தி இந்த கடை அடைப்பு நடந்தது
இந்த கடை அடைப்பு காரணமாக, எப்போதும் மக்கள் நடமாட்டம் கலகலப்பாக இருக்கும் பகுதிகள் கூட வெறிச்சோடிக் கிடந்தன.எனினும் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் போன்றவை வழக்கம் போல் ஓடின. சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூட ஒருநாள் தள்ளிப் போனது.
கடை அடைப்பு நடத்தியவர்கள், மீன் மார்க்கெட் அருகே உள்ள ஏ.கே.எம்.கல்யாண மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.கண்டன ஊர்வலமும் நடந்தது.
குஜராத்தில் மெல்ல அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.