தமிழகத்தில் பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்
சென்னை & சிவகாசி:
தமிழகத்தில் பட்டாசு வெடிக்க போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சேலம் அருகே ஆத்தூரில் நடந்த பட்டாசு விபத்தில் 21 பேர் பலியானதையடுத்து இந்த விஷயத்தில் போலீசார் சில நடவடிக்கைகளைஎடுத்துள்ளனர். மாநிலம் முழுவதுமே லைசென்ஸ் இல்லாமல் பட்டாசு தயாரிக்கும் கும்பல்களை சுற்றி வளைத்து வருகின்றனர்.
இந் நிலையில் தீபாவளி நெருங்குவதால் பட்டாசு வெடிக்கவும் சில கட்டுப்பாடுகள் போடப்பட்டுளளன. சென்னையைப் பொறுத்தவரைகாலை 6 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிக்கலாம் என கமிஷ்னர் விஜய்குமார் உத்தரவிட்டுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுவெடிக்கவும் தடை விதித்துள்ளார்.
மேலும் சாதாரணமாக மக்கள் பேசும்போது எழும் சத்தத்தைப் போல 3 மடங்கு சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மட்டுமே வெடிக்கலாம்எனவும் அதிக ஒலி எழுப்பும் முரட்டு பட்டாசுகளை தயாரிக்கும் பட்டாசு நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும்எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதுமே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
சிவகாசியில் 22 பேர் கைது:
இந் நிலையில் சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டு வருவதாக சிவகாசி தாசில்தார் சுப்ரமணியனுக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து விளாம்பட்டி சாலையில் தாசில்தார் சுப்ரமணியன் சோதனை நடத்தினார். அப்போது ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் லைசன்ஸ்இல்லாமல் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருவது தெரிந்தது.
இதையடுத்து மாரனேரி போலீஸில் தாசில்தார் புகார் கொடுத்தார். அதன் பேரில் லைசன்ஸ் இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த 22பேரையும் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.