நதியற்றுப் போக நாதியற்றவர்களா நாம்?: வைரமுத்து
சென்னை:
நதியற்றுப் போக நாதியற்றவர்கள் அல்ல தமிழர்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்குத்தான் நெய்வேலியில்பிரமாண்டமான கலையுலகப் போராட்டம் நடக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
நெய்வேலி போராட்டம் குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி என்பது நதி மட்டுமல்ல,
தமிழர்களின் நீளமான வரலறு
ஒரு கலாச்சாரத்தின் ஈரம்
தமிழ் மண் மீது ஆண்டாண்டுகளாய் ஓடிக் கொண்டிருக்கும் ஆயுள் ரேகை
முதலில் தமிழர்கள் மொழி இழந்தார்கள்,
அதனால் நிலமிழந்தார்கள்,
படையெடுப்புகளால் பண்பாட்டை இழந்தார்கள்
இன்று நதியிழந்து கொண்டிருக்கிறார்கள்.
நதியற்றுப் போக நாதியற்றவர்கள் அல்ல தமிழர்கள் என்பதை காட்டுவதற்குத்தான் இந்தப் போராட்டம்.
மழை வந்தால் தண்ணீர் தருகிறேன் என்கிறார் கர்நாடக முதல்வர்.
தண்ணீர் வந்தால் எனக்கு, வெள்ளம் வந்தால் உனக்கு என்பது என்ன நியாயம்?
நீங்கள் அணைகளில் தேக்கி வைத்திருப்பதும் மழை நீர் தானே?
காவிரியின் கிளை நதிகளை அணை கட்டி தடுத்தது கர்நாடகம். அந்தக் கிளை நதிகளின் நீர் காவிரியில்சேர்ந்திருந்தால் இந்த விவகாரம் வந்திருக்குமா?
ஏர் உழுதன், மண் வெட்டி பிடித்தவன், கடப்பாரை குத்தியவன்
என்பதனால் ஒரு சராசரி விவசாயியின் அன்றாட அவலங்கள் எனக்கும் தெரியும்.
விளைந்தாலும் கூட 3 வேலை சாப்பிட வழியில்லாத தமிழன்
விதைக்கவே இல்லை என்றால் என்ன ஆவான்?
கர்நாடகமே, நியாயங்களை காயங்கள் ஆக்கிவிடாதே.
பதுக்கிக் கொள்வது என்ற குறுகிய மனப்பான்மை விட்டு
பகிர்ந்து கொள்வது என்ற பரந்த மனப்பான்மைக்கு வாருங்கள்.
விஜயகாந்த்தின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை மாற்றியமைத்த ரஜினியின்பெருந்தன்மையையும் பெரிதும் பாராட்டுகிறோம்.
தமிழக கலைஞர்களை கர்நாடகம் ஒன்று சேர்த்தது,
காலம் பிரித்து விட்டது.
நிகழக் கூடாதது நிகழ்ந்து விட்டது,
இதை பிளவுகள் என்று கருதாமல் இரு
பிரிவுகள் என்றுதான் கருத வேண்டும்.
கல்லால் அடித்தால் என்ன,
அம்பால் அடித்தால் என்ன,
நமக்குத் தேவை கனிதானே?
ஊர்வலம், உண்ணாவிரதம் இரண்டையும்
ஒரே யுத்தத்தின் இரு முனைத் தாக்குதல்
என்று எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்
இவ்வாறு கூறியுள்ளார் வைரமுத்து.